கன்னியாகுமரியை தாக்கிய ஓகி புயல் வந்தப் பாதையில் கடந்த 100 ஆண்டுகளில் புயல் வந்ததே இல்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தை கடந்த 30-ம் தேதி தாக்கிய ஓகி புயல் கடும் சேதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இயற்கை எழில் சூழ்ந்த கன்னியாகுமரியில், பெரும்பாலான மரங்களை இந்தப் புயல் சுருட்டி வீசிவிட்டது பெரும் சோகம். ஆயிரக்கணக்கான மீனவர்கள் புயலில் சிக்கி, மீட்கப்பட்டுள்ளனர். மீனவர்கள் பலரை தேடும் பணி இன்னும் தொடர்கிறது.
கன்னியாகுமரி மாவட்ட மீட்புப் பணிகளை பார்வையிட மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை பிரதமர் மோடி அனுப்பி வைத்தார். அண்மை காலமாக தமிழக சம்பந்தமான பிரச்னைகளுக்கு மத்திய அரசின் பிரதிநிதியாக நிர்மலா சீதாராமன் முன்னிறுத்துப்படுவது குறிப்பிடத்தக்கது.
கன்னியாகுமரிக்கு வந்த நிர்மலா சீதாராமனை தமிழ்நாடு துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். கன்னியாகுமரியில் நிரந்தரமாக ஹெலிகாப்டர் தளம் அமைக்கவேண்டும் என்பது உள்ளிட்ட சில கோரிக்கைகளை தமிழக அரசு சார்பில் இவர்கள் நிர்மலா சீதாராமனிடம் வலியுறுத்தினர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக சேதத்திற்கு உள்ளான திருப்பதிசாரம் உள்ளிட்ட சில இடங்களுக்கு நிர்மலா சீதாராமன் நேரில் சென்று மக்களை சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது :
100 ஆண்டுகளில் குமரியில் ஒகி வந்த பாதையில் புயல் வரவில்லை. மாவட்டம் முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. மின் வசதிக்கு ராணுவம் வராது. ஆனால் குடிநீருக்கு நேவி மற்றும் கடலோர பாதுகாப்பு படை மூலம் ஏற்பாடு செய்யப்படும்.
மீனவர்களை தேட முதன் முறையாக போர்க்கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த கப்பல்கள் குறிப்பிட்ட சதுர கிமீ பகுதியில் தேடுகின்றன. புயல் கடந்த பாதை வழியாக தேடுதல் நடத்தப்படுகிறது. பயிர்கள், மின்வசதி பாதிக்கப்பட்டதற்கு உரிய நிவாரணம் வழங்கப்படும். இருந்தாலும் மீனவர்கள் மாயம் அவர்களின் உயிர் சம்மந்தப்பட்டது என்பதால் அதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களை 30-ம் தேதி முதல் தேடுவதுடன், ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கு ஒருமுறை இதுபற்றி ஆலோசனை நடத்தப்படுகிறது. மீனவர்களை தேடும் கப்பல் மற்றும் ஹெலிகாப்டரில் மீனவர்கள் விரும்பினால் உடன் தேட செல்லலாம். வெளிநாட்டு கப்பல்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் மூலம் 36 மீனவர்களும், நமது கடற்படை கப்பல்கள் மூலம் 372 பேரும் மீட்கப்பட்டுள்ளனர். ’ இவ்வாறு கூறினார்.
முன்னதாக நீராடி மற்றும் கிராத்தூரில் மத்தியஅரசின் தொடர் நடவடிக்கைகளை கடற்படை அதிகாரிகள் மூலம் விளக்கி ஆறுதல் கூறினார்.