/indian-express-tamil/media/media_files/VYmYXXDwGAcGwaUdDTcY.jpg)
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில், அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய சுழற்சிகளால் அடுத்த சில தினங்களுக்கு தமிழகத்தின் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் அமுதா இன்று (அக். 19) செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் அநேக இடங்களில் மழை பெய்துள்ளது. இதில், கோத்தகிரி (நீலகிரி), அருப்புக்கோட்டை, கோவிலங்குளம் (விருதுநகர்) மற்றும் மக்கினம்பட்டி (கோவை) ஆகிய நான்கு இடங்களில் தலா 14 சென்டிமீட்டர் மிக கனமழை பதிவாகியுள்ளது. மேலும், தமிழகத்தில் 17 இடங்களில் கனமழை பெய்துள்ளது.
அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் புதிய சுழற்சிகள்:
நேற்று (அக்டோபர் 18) தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை 8.30 மணி அளவிலும் அதே பகுதிகளில் நீடிக்கிறது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (Depression) வலுப்பெற வாய்ப்புள்ளது.
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அக்டோபர் 21-ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறவும் வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில் இன்று (அக் 19) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது
ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி ஆகிய 18 மாவட்டங்களில் நாளை (அக்.20) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் அக். 23 முதல் 25 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
குறிப்பாக அக்டோபர் 23 அன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய வட கடலோர மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் அனைவரும் அக்டோபர் 21-ம் தேதி காலைக்குள் கரைக்கு திரும்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், அக்டோபர் 19 முதல் 23 வரை தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல், அரபிக்கடல் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என மீனவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இப்பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும், என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் அமுதா தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.