Advertisment

கத்தியுடன் கைது செய்யப்பட்டவருக்கு சீர்வரிசை வழங்கிய ஓ.பி.எஸ்!

செய்தியை அறிந்த ஓபிஎஸ், சோழ ராஜனை பெரியகுளத்தில் உள்ள தனது வீட்டிற்கு வரவழைத்து, அவரின் மகள் திருமணத்திற்கு தேவையான....

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
கத்தியுடன் கைது செய்யப்பட்டவருக்கு சீர்வரிசை வழங்கிய ஓ.பி.எஸ்!

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், விருதுநகர் மாவட்ட நிகழ்ச்சிக்காக கடந்த ஆறாம் தேதி திருச்சி விமான நிலையத்திற்கு வந்த போது, அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி நிர்வாகிகள் திரளாக வரவேற்றனர். அப்போது, கூட்டத்தில் கத்தியுடன் ஒருவர் பிடிபட்டார்.

Advertisment

முதலில் அவரது பெயர் சோலைராஜன் என தகவல்கள் வந்தன. ஆனால் போலீஸ் விசாரணையில் அவரது பெயர் சோழராஜன் (வயது 48) என தெரியவந்தது. திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியை சேர்ந்த இவர் சவரத் தொழிலாளராக உள்ளார். இவர் ஆரம்பகாலம் முதல் அ.தி.மு.க. தொண்டர்! அதிலும் குறிப்பாக ஓ.பி.எஸ். அபிமானி! ஓ.பி.எஸ்.ஸை கத்தியால் தாக்க முயன்றதாக இவர் கைதான சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருச்சி விமான நிலைய போலீஸார் இவரை பிடித்து விசாரித்தார்கள். அதன்பிறகு திருச்சி மாநகர துணை கமிஷனர் சக்தி கணேசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், “சோழராஜன் தீவிர அ.தி.மு.க. உறுப்பினர்தான். உறுப்பினர் அட்டை உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து விட்டோம். தட்டு ரிக்‌ஷா தொழிலாளியான அவர், வேலைக்கு செல்லும்போது ஒரு சிறு கத்தியை கையோடு எடுத்துச் செல்வது வழக்கம். அப்படித்தான் கால் சட்டைக்குள் கத்தியை வைத்திருந்திருக்கிறார்.

விமான நிலையத்தில் நெரிசலில் அவரது வேஷ்டி அவிழ்ந்ததால், கத்தி கீழே விழுந்தது. அதனாலேயே சிக்கிக் கொண்டார். வேறு தவறான நோக்கத்தில் அவர் வந்ததாக தெரியவில்லை. ஆனாலும் விமான நிலையம் என்பது பாதுகாக்கப்பட்ட பகுதி. அங்கு ஆயுதங்களுடன் செல்வது தவறு. அதற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்து ஜாமீனில் விடுவித்துள்ளோம்.” என்றார் அவர்.

சோழராஜனின் மனைவி ராஜேஸ்வரி கூறுகையில், “எனது மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்திருக்கிறோம். அ.தி.மு.க. தொண்டர் என்ற அடிப்படையில் ஓ.பி.எஸ்.ஸை சந்தித்து உதவி கேட்கச் சென்றிருப்பார் என நினைக்கிறேன். யாரையும் தாக்கவேண்டும், கொல்லவேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு கிடையாது. அதற்கான அவசியமும் இல்லை. அநியாயமாக ஒரு தொண்டரை சந்தேகப்பட்டு, அந்த குடும்பத்தின் வாழ்க்கையை சீரழித்துவிட்டார்களே!” என கண்ணீர் விட்டார் அவர்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அவர் ஓபிஎஸ்-சை சந்தித்து தன் மகள் திருமணத்திற்கு உதவி கேட்க வந்தது உண்மை என தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு எதுவும் பதியாமல் அவரை விடுவித்தனர். இந்த செய்தியை அறிந்த ஓபிஎஸ், சோழ ராஜனை பெரியகுளத்தில் உள்ள தனது வீட்டிற்கு வரவழைத்து, அவரின் மகள் திருமணத்திற்கு தேவையான கட்டில், பீரோ, மெத்தை, வீட்டு உபயோக பாத்திரங்கள் மற்றும் திருமண செலவிற்கான பணம் ஆகியவற்றை கொடுத்து வழி அனுப்பி வைத்தார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment