ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால், சமீபத்தில் மதுரையில் ஒரு தம்பதி தற்கொலை செய்து கொண்டதன் பரபரப்பு அடங்குவதற்குள் கடலூரில் தாய், மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் மேலாப்பாளையத்தை சேர்ந்தவர் அருள்வேல். சாப்ட்வேர் இஞ்ஜினியரான இவர், சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்துவருகிறார். இவர் மாதம் ஒரு லட்சம் சம்பளம் பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. பணப்புழக்கம் அதிகரித்தது, சென்னையில் தனியாக வசித்தது உள்ளிட்ட காரணங்களால், டைம்பாஸ் செய்வதற்கு ஆன்லைனில் ரம்மி சூதாட்டம் விளையாட துவங்கினார். ஆரம்பகட்டம் என்பதால், சிறிய தொகை கட்டியே விளையாடி வந்துள்ளார். அதில் அனைத்திலும் வெற்றி பெற்றார். பின்னர், கையில் இருந்த முழுப்பணத்தை கொண்டு விளையாட துவங்கினார். ஆன்லைன் ரம்மி சூதாட்டம், அப்போதுதான் தனது உண்மையான முகத்தை காட்டத்துவங்கியது. பணத்தை இழக்க துவங்கினார். திறமையாக விளையாடினால், இழந்த பணத்தை மீட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில், வட்டிக்கு பணம் வாங்கி விளையாட துவங்கினார்.
அந்த பணத்தையும் அவர் இழந்தார். இதனால் ஏற்பட்ட மனவிரக்தியால், வேலைபார்க்கும் இடத்திலும் போதிய கவனம் செலுத்த முடியாததால், அந்த வேலையையும் பறிகொடுத்தார். இதனால், அருள்வேல், சொந்த ஊருக்கே திரும்பிவிட்டார். வட்டிக்கு கடன் கொடுத்தவர்கள், வீட்டிற்கே வந்து நெருக்கடி கொடுத்தனர். நிலைமையை, தாய் ராஜலட்சுமியிடம் எடுத்துக்கூறினார்.
நிலைமை கைமீறி சென்றதை உணர்ந்த இருவரும், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இது அவர்கள் வீட்டிலிருந்து போலீசார் கைப்பற்றிய கடிதத்தின் மூலம் தெரியவந்ததுள்ளது.
மத்திய மாநில அரசுகள் , ஆன்லைனில் உள்ள ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகள் தொடர்பாக, கண்காணிப்பு மேற்கொண்டு அவற்றை முறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.