நடிகை குஷ்பூ வயிற்று வலியால் அவதிப்பட்டு வருவதை தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற இருக்கிறது. இதனால் கட்சி நிகழ்ச்சிகளை அவர் ரத்து செய்திருக்கிறார்.
நடிகை குஷ்பூ, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்து வருகிறார். தமிழகத்தைப் பொறுத்தவரை, காங்கிரஸ் கட்சிக்கு பிரதான பிரசாகர் அவர்தான். அண்மையில் அவரை பொதுக்குழு உறுப்பினராக விதிமுறைக்கு புறம்பாக நியமனம் செய்ததாக சர்ச்சை எழுந்தது. ஆனால் அதை குஷ்பூ மறுத்தார்.
பின்னர் டெல்லியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார் குஷ்பூ. அதைத் தொடர்ந்து அவரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. அரசியலில் மட்டுமல்லாமல், டிவி ஷோக்களிலும் பிஸியாக இயங்கி வருபவர் குஷ்பூ!
அண்மையில் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அவர் வழுக்கி விழுந்ததையொட்டி அவரது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக அவர் சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையே அவர் மருத்துவமனையில் ‘அட்மிட்’ ஆகி, காலில் அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகின.
இது குறித்து குஷ்பூவை செய்தியாளர்கள் தொடர்புகொண்டு கேட்ட போது, ‘ஆபரேசன் செய்யவிருப்பது கணுக்கால் வலிக்கு அல்ல. கணுக்கால் வீக்கம் ஒரு மாதமாகவே இருக்கிறது. அதற்கு டாக்டர் ஆலோசனைப்படி மருந்து போடுகிறேன். வயிற்று வலி காரணமாக மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற போது, வயிற்றில் ஏற்பட்டுள்ள சிறு கட்டியை அகற்ற ஆபரேசன் தேவை என்றார். அதற்காகவே வருகிற 4-ம் தேதி ஆபரேசனுக்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.’ என்றார் குஷ்பூ.
இந்திரா காந்தி நூற்றாண்டு விழாவையொட்டி நவம்பர் 4, 8, 17-ம் தேதிகளில் குஷ்பூ பங்கேற்கும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 4-ம் தேதி ஆபரேசன் முடிந்ததும் ஓய்வு தேவை என்பதால், அவர் கலந்து கொள்ள இருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்திருக்கிறார் குஷ்பூ.