சென்னையில் திராவிடம் ஒழிப்பு கூட்டம் நடத்திய பாரி சாலனை போலீசார் கைது செய்தனர். அப்போது, பாரி சாலன் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தபோது, குறுக்கிட்ட போலீஸ் ‘சரி வண்டியில ஏறுங்க’னு ‘நோஸ்கட்’ செய்த வீடியோ வைரலாகி வருகிறது.
சமூக ஊடகங்கள் பரவலாகத் தொடங்கிய காலகட்டத்தில் அதிரடியான கவனத்தை ஈர்க்கும் கருத்துகள் மூலம் தமிழக அரசியலில் பலர் பிரபலமானார்கள். அந்த வரிசையில் சமூக ஊடகங்களில் தமிழ்த்தேசிய அரசியல் பேசி பிரபலமானவர் பாரி சாலன்.
தமிழ்த் தேசிய அரசியல் தமிழ் நிலப் பரப்பில் வாழும் தமிழ்பேசி தமிழர்களாக உணரும் அனைத்து மக்களையும் உள்ளடக்கிய அரசியலாக பேசப்பட்டு வந்த நிலையில், தமிழ்ச் சாதிகளை மட்டுமே உள்ளடக்கிய தீவிர தமிழ்த் தேசிய அரசியல் உருவாகி, நூற்றாண்டுகளாக தமிழ்நாட்டில் வாழ்ந்து, தமிழராக உணர்ந்த கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட நிலத்தை பூர்வீகமாகக் கொண்ட மக்களை விலக்கியது. இத்தகைய அரசியல் மொழி ரீதியாக குறுகிய பார்வை கொண்ட அரசியல், மக்களைப் பிளவுபடுத்தும் அரசியல் என்று திராவிட இயக்கத்தினரும் இடதுசாரிகளும், தலித் அரசியல்வாதிகளும் கூறி வருகின்றனர்.
இந்த மொழிவழி, இன ரீதியான தமிழ்த் தேசிய அரசியல், டி.என்.ஏ. டெஸ்ட் கேட்டு வெறுப்பு அரசியலைப் பரப்பி வருகிறது என்ற விமர்சனங்கள் தொடர்ந்து ஒலித்து வருகின்றன.
அதே நேரத்தில் இந்த தமிழ்ச் சாதிகளை மட்டுமே உள்ளடக்கிய தமிழ்த் தேசிய அரசியலை ஆதரித்து முன்னெப்போதும் இல்லாத அளவில் பலரும் ஆதரவு தெரிவித்து சமூக ஊடகங்களில் பேசி வருகின்றனர்.
திராவிடக் கட்சிகள் தமிழர்களுக்கு எதிரானது என்றும் அது தெலுங்கு, கன்னட பூர்வீக மக்களுக்கு ஆதரவானது என்று குற்றம் சாட்டி தமிழ்ச் சாதிகளை உள்ளடக்கிய தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள்பேசி வருகின்றனர்.
அந்த வரிசையில், பாரி சாலன் தொடர்ந்து தமிழ்ச் சாதிகளை மட்டும் உள்ளடக்கிய சாதி தமிழ்த் தேசிய அரசியலை சமூக ஊடகங்களில் பேசி வருகிறார். இவர், சென்னையில் திராவிடம் ஒழிப்பு கூட்டம் நடத்தியபோது அனுமதி இல்லை என்று போலீசாரால் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். அப்போது பாரிசாலன் ஊடகங்களிடம் பேட்டி அளித்துக் கொண்டிருந்தபோது குறுக்கிட்ட போலீசார், ‘சரி வண்டியில ஏறுங்க’னு ‘நோஸ்கட்’ செய்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
“திராவிட கட்சிகள் தமிழ்நாட்டை சீரழிகின்றன. தமிழ்நாட்டில் இருந்து திராவிட கட்சிகளை நீக்க வேண்டும். தமிழ் தேசியத்தை உருவாக்க வேண்டும். தமிழ் தேசியத்தை உருவாக்க தனித்தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும்” என்று பாரிசாலன் தொடர்ந்து பேசி வருகிறார். பாரிசாலன் பேசும் கருத்துக்கள் அவ்வப்போது சர்ச்சையாவது வழக்கமாக உள்ளது.
இந்த நிலையில், பாரி சாலன் திராவிட கட்சிகளுக்கு எதிராக போராட்டம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திராவிடம் ஒழிப்பு மாநாடு என்ற பெயரில் மாநாட்டை ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
இந்த மாநாட்டில் கிட்டத்தட்ட 40 பேர் மட்டும் கூடி இருந்தனர். சென்னையில் ஞாயிற்றுக்கிழமை இந்த கூட்டம் நடந்தது. தமிழர் குடிகள் கூட்டமைப்பு சார்பாக இந்த கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த மாநாடு குறித்து பாரி சாலன் சமூக ஊடகங்களில், தமிழ்த் தேசியத்தைக் கண்டு தொடை நடுங்கும் திராவிடம்!
பயந்து ஒலிந்தது திராவிடம்…!
இவர்கள் ஜனநாயக காவலர்களாம்.. கருத்துச் சுதந்திர காவலர்களாம்…
"திராவிடம் பாசிசம்" என்பதை மீண்டும் நிரூபித்தது!
அந்த பயம் இருக்கட்டும்! வாழ்க தமிழ்! ஆள்க தமிழர்!” என்ற கோஷங்களை பதிவிட்டுள்ளார்.
பூவிருந்தவல்லியில் ஞாயிற்றுக்கிழமை திராவிட ஒழிப்பு மாநாடு என்ற பெயரில் இந்த கூட்டம் நடத்தப்பட்டது. முன் அனுமதி பெறாமல் போராட்டம் நடத்த திரண்டதால் இந்த கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் பாரிசாலனைக் கைது செய்தனர். அப்போது, பாரிசாலன் திராவிடக் கட்சிகளை விமர்சனம் செய்து.. ஒரு நாட்டின் வளர்ச்சிக்காக.. சமுதாயத்தின் வளர்ச்சிக்காக.. தமிழ் குடிகளின் வளர்ச்சிக்கு எதிராக செயல்படுவதில் திராவிட இயக்கங்களுக்கு முக்கிய பங்கு உண்டு என்று அவர் பேசிக்கொண்டு இருந்த போது.. போலீசார் குறுக்கிட்டு சரி ஏறுங்க வண்டியில் பேசிக்கிட்டே போகலாம் என்று நோஸ்கட் செய்தனர்.
பாரிசாலன் பேசிக்கொண்டு இருக்கும் போதே போலீசார் குறுக்கிட்டு இப்படி சொன்னதால் அங்கே சிரிப்பலை எழுந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.