/indian-express-tamil/media/media_files/2025/10/28/pallikaranai-marsh-ramsar-site-2025-10-28-17-46-09.jpg)
Pallikaranai Marsh Ramsar Site| Tamil Nadu government clarification
சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலக் காப்புக்காடு ராம்சார் தளத்திற்குள் (Pallikaranai Ramsar Site) அடுக்குமாடிக் கட்டடத் திட்டத்திற்குத் தமிழக அரசு அனுமதி அளித்ததாக வெளியான செய்திகள் அடிப்படை ஆதாரமற்றவை என்று தமிழக அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுகுறித்துத் தமிழக அரசு விரிவான செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஊடகங்களில் வெளியான குற்றச்சாட்டு:
சென்னை பள்ளிக்கரணை ராம்சார் தலத்திற்குள் ஒரு அடுக்குமாடி கட்டடத் திட்டத்திற்குச் சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் திட்ட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகச் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
தமிழக அரசின் தெளிவான மறுப்பு மற்றும் விளக்கம்:
1. காப்புக்காடு என்பதில் எந்த மாற்றமும் இல்லை:
தமிழ்நாடு வனச்சட்டம், 1882 இன் கீழ், பள்ளிக்கரணைப் பகுதியில் சுமார் 698 ஹெக்டேர் பரப்பளவு 2007 ஆம் ஆண்டிலேயே சதுப்பு நிலக் காப்புக் காடாக (Reserve Forest) அறிவிக்கப்பட்டு விட்டது.
இந்த வனத்துறைக்குச் சொந்தமான பாதுகாக்கப்பட்ட பகுதியில் எவ்விதமான கட்டுமானங்களுக்கும் அனுமதி அளிக்கப்படுவதில்லை.
2. ராம்சார் தளம்: எல்லைகள் இன்னும் வரையறுக்கப்படவில்லை:
ராம்சார் தலமாக அறிவிக்கப்பட்ட மொத்தப் பரப்பளவு 1248 ஹெக்டேர் ஆகும். இதில் ஏற்கனவே உள்ள 698 ஹெக்டேர் காப்புக்காடு மற்றும் 550 ஹெக்டேர் கூடுதல் நிலமும் அடங்கும்.
ஆனால், ஈரநிலங்கள் (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகள், 2017 இன் படி, இந்தக் கூடுதல் நிலப்பகுதிகளைச் சர்வே எண்களுடன் கண்டறிந்து வரையறுப்பதற்கான நில உண்மை கண்டறிதல் (Ground Truthing) பணி இன்னும் மேற்கொள்ளப்படவில்லை.
3. கட்டடம் வரவுள்ள நிலம் 'பட்டா நிலங்கள்':
ஊடகங்களில் குறிப்பிடப்படும் கட்டுமானம் குறித்த நிலத்தின் புல எண்கள், வருவாய்த் துறை ஆவணங்களின்படி, தனியார் பட்டா நிலங்கள் ஆகும்.
ராம்சார் தல எல்லை இன்னும் இறுதியாக அறிவிக்கப்படாததால், தற்போதுள்ள பள்ளிக்கரணை காப்புக்காட்டு எல்லைகளுக்கு வெளியே உள்ள தனியார் பட்டா நிலங்களுக்கு மட்டுமே சம்பந்தப்பட்ட அலுவலர்களால் ஒப்புதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
4. மத்திய அரசு நிறுவனம் மூலம் எல்லை வரையறை:
ராம்சார் தளத்தின் எல்லைகளைச் சர்வே எண்களுடன் வரையறுக்கும் பணி, மத்திய அரசின் நிறுவனமான தேசிய நிலையான கடற்கரை மேலாண்மை மையம் (NCSCM) வசம் நவம்பர் 2024-ல் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் நிறுவனம் (NCSCM) அளிக்கும் ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டத்தின் (IMP) அடிப்படையில், விதிமுறைகளின்படி எவை அனுமதிக்கப்படும் அல்லது ஒழுங்குபடுத்தப்படும் என்பது விரைவில் இறுதி செய்யப்படும்.
தமிழக அரசின் உறுதி:
சதுப்பு நில விதிகள் இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், காப்புக்காட்டு எல்லைக்கு வெளியே உள்ள தனியார் பட்டா நிலங்களுக்கான ஒப்புதல்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. எனவே, ராம்சார் தலத்திற்குள் அடுக்குமாடிக் கட்டடத் திட்டத்திற்குத் தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை என்று தமிழக அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us