ப. சிதம்பரம், திருச்சி சிவா உள்பட தமிழகத்தைச் சேர்ந்த 18 எம்.பி.க்கள் பல்வேறு நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தொழில்துறை குழுவின் தலைவராக திருச்சி சிவா நியமிக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற செய்திக் குறிப்பின் படி, மக்களவை சபாநாயகருடன் கலந்தாலோசித்த பிறகு, மாநிலங்களவை தலைவர் எட்டு துறைகள் தொடர்பான பாராளுமன்ற நிலைக்குழுக்களை மீண்டும் மறுசீரமைத்துள்ளார். இந்த மறுசீரமைப்பு செப்டம்பர் 13 முதல் அமலுக்கு வருகிறது.
அதன்படி நாடாளுமன்ற வர்த்தக நிலைக்குழு உறுப்பினராக திமுக எம்.பி. பொன் கவுதம் சிகாமணி நியமிக்கப்பட்டுள்ளார்.
கனிமொழி என்.வி.என். சோமு (திமுக), தம்பிதுரை (அதிமுக), டி.ஆர். பாரிவேந்தர் (திமுக), சு. வெங்கடேசன் (சிபிஎம்) ஆகியோர் கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மக்களவை எம்.பி.க்கள் கே. நவாஸ் கனி (இ.யூ.மு.லீ) மற்றும் செந்தில் குமார்.எஸ் (திமுக) ஆகியோர் சுகாதாரம் மற்றும் குடும்ப நலக் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
உள்நாட்டு விவகாரங்களுக்கான குழு உறுப்பினர்களாக ப. சிதம்பரம் (காங்கிரஸ்), என்.ஆர். இளங்கோ (திமுக), தயாநிதி மாறன் (திமுக) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் (திமுக), சு.திருநாவுக்கரசர் (காங்கிரஸ்) மற்றும் விஜய் வசந்த் (காங்கிரஸ்) ஆகியோர் தொழில்துறைக்கான குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பி வில்சன் (திமுக), பி மாணிக்கம் தாகூர் (காங்கிரஸ்) மற்றும் அ.ராசா (திமுக) ஆகியோர் பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள், சட்டம் மற்றும் நீதிக்கான குழுவில் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.
போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாச்சாரம் தொடர்பான குழுவில் திமுக எம்பி எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.