/indian-express-tamil/media/media_files/2025/10/30/admk-2025-10-30-16-25-05.jpg)
Pasumpon Sengottaiyan OPS Dhinakaran meeting| Thevar Jayanthi| AIADMK unity| Sasikala
ராமநாதபுரம், பசும்பொன்:
முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழா நடந்த பசும்பொன்னில், அ.தி.மு.க.வின் அனைத்து எதிரணி தலைவர்களும் ஒரே மேடையில் இணைந்தது தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனையாக மாறியுள்ளது.
அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். செங்கோட்டையன் இருவரும் இன்று ஒரே வாகனத்தில் பசும்பொன் வந்து சேர்ந்தனர். தேசிய நெடுஞ்சாலையில் காத்திருந்த தொண்டர்களின் வரவேற்பையும் அவர்கள் இணைந்து ஏற்றுக்கொண்டனர்.
அவர்கள் வந்த சில நிமிடங்களிலேயே அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பசும்பொன்னிற்கு வந்தார். இதையடுத்து, அ.தி.மு.க. தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் இந்த மூன்று முக்கிய புள்ளிகளும் தேவர் நினைவிடத்தில் ஒன்றாக சந்தித்துப் பேசினர்.
பசும்பொன் மண்ணில் 'துரோகத்தை வீழ்த்த' சபதம்:
அஞ்சலி செலுத்திய பின்னர் ஓபிஎஸ், தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது ஓபிஎஸ்: "பிரிந்து கிடக்கும் அதிமுகவினரை ஒன்றிணைக்கவே இன்று இணைந்திருக்கிறோம். மீண்டும் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆட்சியைக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் தேவரின் சன்னதியில் சபதம் மேற்கொண்டிருக்கிறோம். பசும்பொன்னில் இருந்து இந்த கூட்டணி தொடரும்" என்றார்.
டிடிவி தினகரன்: "துரோகத்தை வீழ்த்துவதற்கு எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆட்சியைக் கொண்டு வர தொண்டர்கள் அனைவரையும் ஒன்றிணைக்க, ஓபிஎஸ், செங்கோட்டையன் எங்களுடன் இணைந்திருக்கிறார்கள். சசிகலா இந்த கூட்டணியில் உறுதியாக இணைகிறார். நாங்கள் ஜெயலலிதாவின் தொண்டர்கள் என்ற அடிப்படையில் இணைந்திருக்கிறோம்" என்றார்.
சசிகலா வருகை: நான்கு தலைவர்கள் சந்திப்பு!
இந்தச் சந்திப்பு முடிந்து தினகரன் புறப்பட்டுச் சென்ற நிலையில், வி.கே. சசிகலா முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்த அங்கு வந்தார். அப்போது, அங்கேயே காத்திருந்த ஓபிஎஸ்ஸும், செங்கோட்டையனும் சசிகலாவை நேரில் சந்தித்தனர்.
ஓபிஎஸ் - செங்கோட்டையன்
ஓபிஎஸ் - தினகரன் - செங்கோட்டையன்
ஓபிஎஸ் - சசிகலா - செங்கோட்டையன்
என அடுத்தடுத்து நடந்த இந்த முக்கிய சந்திப்புகள், அ.தி.மு.க.வில் எதிர்க்கோஷ்டியைச் சேர்ந்த நான்கு தரப்பினரும் (ஓபிஎஸ், சசிகலா, தினகரன், செங்கோட்டையன்) ஒருங்கிணைந்துள்ளதாகப் பார்க்கப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சிக்கல்!
செங்கோட்டையன் சமீபத்தில் அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி நீக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக உள்ள இந்த முக்கிய தலைவர்கள் அனைவரும் தென் மாவட்டமான ராமநாதபுரத்தில் ஒரே நாளில் சந்தித்துப் பேசியிருப்பது, அ.தி.மு.க. தலைமைக்கு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே முத்துராமலிங்கம் தேவர் நினைவிடத்தில் செங்கோட்டையன், ஓ.பி.எஸ், டி.டி.வி தினகரன் ஆகியோர் ஒன்றாக இணைந்து செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தியது குறித்து எடப்பாடி பழனிசாமி கூறுகையில், ’இவர்கள் எல்லோரும் திமுகவின் B டீம். இப்படிப்பட்ட துரோகிகளால் தான் அதிமுக ஆட்சிக்கு வரமுடியாமல் போனது; 2 நாளைக்கு முன்பு ஓ.பி.எஸ், திமுக ஆட்சிக்கு வரும் என்றார்; இவர்கள் எல்லோரும் திமுகவின் B டீம் ஆக செயல்படுகின்றனர்’ என்று காட்டமாக பேசினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us