/tamil-ie/media/media_files/uploads/2017/09/Perarivalan-father-kuyildasan.jpg)
பரோல் விடுப்பில் வந்துள்ள பேரறிவாளனின் தந்தை ஞானசேகரன் என்கிற குயில்தாசன் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது தந்தையைக் காண பரோல் கோரி விண்ணப்பித்திருந்தார். அதனையேற்று, 26 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளனை ஒரு மாத காலம் பரோலில் விடுவிக்க தமிழக அரசு கடந்த மாதம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து பேரறிவாளன் வேலூர் சிறையில் இருந்து ஒரு மாத பரோலில் விடுவிக்கப்பட்டார். 26 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த மாதம் 25-ம் தேதி தான் பரோல் மூலம் வெளியுலகத்தை பேரறிவாளன் பார்த்தார். தன்னுடையே வீட்டில் தான் பேரறிவாளன் தங்கியிருக்க வேண்டும். பத்திரிகை, தொலைக்காட்சிகளுக்கு பேட்டியாழிக்கக் கூடாது போன்ற பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, பேரறிவாளனின் பரோலை மேலும் 30 நாட்களுக்கு நீடிக்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் முதல்வர் பழனிசாமிக்கு கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியிருந்தார். இதையேற்ற தமிழக அரசு, பேரறிவாளனின் பரோல் முடிவடையவிருந்த நிலையில், அவரது பரோலை மேலும் ஒரு மாத காலம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரகப் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ள அவரது தந்தையின் உடல் நிலை தற்போது அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் அளவிற்கு இல்லாததால், அவருக்கு ஒருவார காலம் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். அவருடன் அவரின் உறவினர்கள் மருத்துவமனையில் இருந்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.