தமிழகத்தில் புதிதாக வைரஸ் நோய்கள் பரவுவதற்கான காரணத்தை தெரிவிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில், மருந்து ஸ்டோர் பொறுப்பாளராக பணிபுரிந்த முத்துமாலைராணி, நிறுத்தி வைக்கப்பட்ட தனது ஓய்வூதிய பலன்களை வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மருந்து ஸ்டோர் அதிகாரியாக இருந்தபோது அதிகப்படியான மருந்துகளை வாங்கியதாகவும், அது காலாவதியாகி அரசு கருவூலத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகவும் அவர் மீது புகார் கூறப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஏழை நோயாளிகளுக்கு காலாவதியான மருந்துகள் வழங்கப்படுவதாக பொதுமக்கள் மத்தியில் பரவலான குற்றச்சாட்டுகள் உள்ளன.
கொரோனாவுக்கு பின் குரங்கம்மை, வைரஸ் காய்ச்சல் என, பல்வேறு நோய் பரவல்கள் தொடர்கின்றன. இதற்கான காரணங்களை கண்டுபிடிக்கவில்லை.
தங்கள் தனிப்பட்ட லாபத்திற்காக சமூகத்தில் இதுபோன்ற நோய்களைப் பரப்பும் விஷயத்தில், சட்டவிரோதமாக மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் ஈடுபடுகிறதா என்பதை விசாரிக்க வேண்டும்.
அரசு மருத்துவமனைகளுக்கும், தனியாருக்கும், மருந்துகள் வழங்கும் நிறுவனங்களின் நடவடிக்கைகளை, அரசு கண்காணிக்கிறதா என்பதை பரிசீலிக்க வேண்டியதுள்ளது.
மேலும் இதுபோன்ற நோய்கள் 'தொடர்ந்து பரவுவதற்கு' காரணம் குறித்து விசாரணை நடத்தி அக்டோபர் 27 ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்கவும் நீதிமன்றம், தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“