கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள பில்லூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், மதகுகள் திறக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், இதனால் பவானி ஆற்று கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்படுவதாகவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இன்று காலை கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,"மேட்டுப்பாளையம் வட்டம் பில்லூர் அணையின் மொத்த நீர்மட்டம் 100 அடியில், தற்போதைய நிலவரப்படி (காலை 4.30) நீர்மட்டம் 93.5 அடியை எட்டி உள்ளது.
பில்லூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து அணைக்கு நீர்வரத்து 14,000 கன அடி வீதம் வந்து கொண்டிருப்பதால், இன்று காலை அணையின் மதகுகள் திறக்க வாய்ப்புகள் உள்ளதாக நீர் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ள காரணத்தினால் பவானி ஆற்று கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருந்திடவும், சிறுவர்கள் ஆற்று பக்கம் செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“