சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு அரசு, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை துறைமுக பொறுப்புக் கழகம் மற்றும் இந்திய கடற்படை ஆகியவற்றுக்கு இடையே திங்கள் கிழமை கையெழுத்தானது.
அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட இந்த திட்டம் தற்போது 10 ஆண்டுகளுக்குப் பிறகு புத்துயிர் பெற்றுள்ளது.
இத்திட்டத்தின்படி, சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான 20.565 கி.மீ. நீளத்திற்கு ரூ.5855 கோடி மதிப்பில் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை அமைக்கப்படும்.
மே 26-ம் தேதி சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில், உயர்த்தப்பட்ட விரைவுச்சாலை உட்பட நான்கு அமைச்சகங்களின் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி, அடிக்கல்நாட்டி துவக்கி வைக்கிறார். விரைவில் டெண்டர் விடப்பட்டு, ஒப்பந்தம் வழங்கப்பட்ட நாளிலிருந்து 30 மாதங்களில் திட்டம் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு அரசு, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை துறைமுக பொறுப்புக் கழகம் மற்றும் இந்திய கடற்படை ஆகியவற்றிற்கிடையே கையெழுத்தானது.
இந்த திட்டத்தின்படி, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான 20.565 கிலோமீட்டர் நீளத்துக்கு, ரூ.5,855 கோடி மதிப்பில் இரண்டு அடுக்கு உயர்நிலைச் சாலை அமைக்கப்படும்.
இந்த இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலையில், சென்னை துறைமுகம் முதல் கோயம்பேடு வரையிலான முதல் அடுக்கில் உள்ளூர் வாகனங்கள் மட்டும் பயணிக்கும். அதற்காக 13 இடங்களில் வாகனங்கள் ஏறும், இறங்கும் சாய் தளங்களுடன் இச்சாலை அமைக்கப்பட உள்ளது.
இரண்டாவது அடுக்கு, துறைமுகம் முதல் மதுராயல் வரை, இருபுறமும் பயணிக்கும் கனரக வாகனப் போக்குவரத்துக்கு மட்டும் அனுமதிக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
பல்வேறு காரணங்களால் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த இப்பணி, தமிழக அரசின் தொடர் முயற்சிகள் காரணமாக தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, தலைமைச் செயலர் வெ.இறையன்பு, நெடுஞ்சாலைத் துறைச் செயலர் கே.கோபால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.