மதுரை:
மதுரையில் லஞ்ச வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் தனது மனைவியை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பெருமாள் பாண்டியன். இவரது மனைவி உமா மீனாட்சி. இவர் ஒரு கார்ப்பரேஷன் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு சுந்தர் சுகிர்தன் மற்றும் பிரனவ் கவுதம் என இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் சுந்தர் சுகிர்தன் கம்யூட்டர் படித்து வரும் நிலையில், பிரனவ் கவுதம் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 2010 ஆண்டு, அரசு மருத்துவர் ஒருவரை வழக்கில் இருந்து விடுவிப்பதற்காக ரூ .1.2 லட்சம் லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட பெருமாள் பாண்டியன் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 14-ந் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் பெருமாள் பாண்டியன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதனையடுத்து ஜாமீனில் வெளிவந்த பெருமாள் பாண்டியன், தனக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஆத்திரத்தில் அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் மகன்கள் யாரும் இல்லாத நிலையில், மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் இதில் ஆத்திரமடைந்த பெருமாள் பாண்டியன் தனது மனைவியை சுத்தியலால் அடித்து கொலை செய்துவிட்டு தானும் தூக்கு போட்டி தற்கொலை செய்துகொண்டார்.
இந்நிலையில், கம்ப்யூட்டர் படிப்புக்குச் சென்றிருந்த மூத்த மகன் சுந்தர் சுகிர்தன் மதியம் வீட்டிற்கு வந்தபோது தாய் தந்தை இருவரும் இறந்து கிடப்பதை பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த செல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைசாமி தலைமையிலான போலீசார், இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தடயவியல் குழுக்களுடன் இணைந்து ஆதாரங்களை சேகரிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையைத் தொடர்ந்து பெருமாள் பாண்டியன் ஆத்திரத்தில் தனது மனைவியை கொலை செய்திருக்கலாம் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"