சிம்பு பாடிய பண மதிப்பிழப்பு பாடல் வைரலாகியுள்ளதால், அவர் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடந்த வருடம் நவம்பர் 8ஆம் தேதி, 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என திடீரென அறிவித்தார் இந்தியப் பிரதமர் மோடி. கறுப்புப் பணத்தை ஒழிக்கவே இந்த அறிவிப்பு என்று அவர் சொன்னார். ஆனால், பாதிக்கப்பட்டது என்னவோ சாமானிய மக்கள்தான்.
நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பைச் சம்பாதித்த இந்த விவகாரம், நேற்றோடு ஒரு வருடத்தைக் கடந்துள்ளது. இதையொட்டி, பண மதிப்பிழப்பு விவகாரத்தால் ஏற்பட்ட பாதிப்புகளைப் பாடலாக உருவாக்கியுள்ளனர் ‘தட்றோம் தூக்குறோம்’ படக்குழுவினர்.
பாலமுரளி பாலு இசையமைத்துள்ள இந்தப் பாடலுக்கு, கபிலன் வைரமுத்து வரிகள் எழுதியுள்ளார். இந்தப் பாடலை சிம்பு பாடியுள்ளார். எஸ்.அருள் இந்தப் படத்தை இயக்குகிறார்.
இந்தப் பாடல் வைரலாகியுள்ளதால், பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடும் என்பதற்காக சிம்பு வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தி.நகரில் உள்ள அவருடைய வீட்டிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.