புதுவையில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், தமிழக பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது.
புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி பதவியேற்றதில் இருந்தே முதல்வர் நாராயணசாமிக்கும், துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்குமான அதிகார மோதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இதனிடையே, புதுவை அரசு பரிந்துரைக்காமல் ஆளுநர் கிரண்பேடி பரிந்துரைத்த 3 பேரை நியமன எம்எல்ஏ-க்களாக ஏற்று மத்திய அரசு உத்தரவிட்டது. சட்டப்பேரவையில் பேரவைத் தலைவருக்கு முன்பு பதவி ஏற்காத நிலையில், அவர்கள் மூவருக்கும் ஆளுநர் மாளிகையில் கிரண்பேடி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
நியமன எம்எல்ஏ-க்கள் விவகாரத்தில் காங்கிரஸ், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன. மேலும், இதனை கண்டித்து இன்று முழு அடைப்பு போராட்டம் அக்கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன.
அதன்படி, புதுவையில் இன்று முழு அடைப்பு போராட்டம் துவங்கி நடைபெற்று வருகிறது. அரசு, தனியார் பேருந்துகள் இயங்கவில்லை. பெருமபாலான கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், புதுவையில் இருந்து சென்னை சென்ற அரசு பேருந்தின் மீது மர்ம நபர்கள் கல் வீசித் தாக்குதல் நடத்தினர். இதில், பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது. அரசு பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டதால் புதுவையில் பரபரப்பு நிலவுகிறது.