Advertisment

இரட்டை இலை வழக்கில் நாங்கள் விரும்பிய அவகாசம் கிடைத்திருக்கிறது : டிடிவி தரப்பு

இரட்டை இலை சின்னம் வழக்கில் நாங்கள் விரும்பிய அவகாசம், தேர்தல் ஆணையத்தின் தள்ளிவைப்பு மூலமாக கிடைத்திருக்கிறது என டிடிவி தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
two leaves symbol case, election commission of india inquires two leaves case, tamilnadu, ECI, two leaves symbol, election commission of india

இரட்டை இலை சின்னம் வழக்கில் நாங்கள் விரும்பிய அவகாசம், தேர்தல் ஆணையத்தின் தள்ளிவைப்பு மூலமாக கிடைத்திருக்கிறது என டிடிவி தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

Advertisment

இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பதை அக்டோபர் 31-க்குள் முடிவு செய்யும்படி இந்திய தேர்தல் ஆணையத்திற்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதைத் தொடர்ந்து அக்டோபர் 6-ம் தேதி (இன்று) பிற்பகல் 3 மணிக்கு நேரில் ஆஜராகும்படி இரு தரப்புக்கும் தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியது.

அதற்கு முன்பாக உரிய ஆவணங்களை தாக்கல் செய்ய செப்டம்பர் 29-ம் தேதியை கடைசி நாளாக தேர்தல் ஆணையம் நிர்ணயம் செய்தது. இந்த அவகாசத்தை மேலும் 3 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என டிடிவி தினகரன் முன்வைத்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை.

இரட்டை இலை சின்னம் வழக்கில் ஆவணங்கள் தாக்கல் செய்ய கடைசி நாளான 29-ம் தேதி இபிஎஸ்-ஓபிஎஸ் இணைந்த அணி சார்பில் அமைச்சர்கள் ஜெயகுமார், சி.வி.சண்முகம், உதயகுமார், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் டெல்லியில் முகாமிட்டு பக்கம் பக்கமாக அபிடவிட்களை தாக்கல் செய்தனர்.

115 எம்.எல்.ஏ.க்கள், 44 எம்.பி.க்கள், 50 மாவட்டச் செயலாளர்கள், 1800-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களின் அபிடவிட்களை இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்தது. இதற்கு பதிலடியாக டிடிவி தினகரன் அணி சார்பில் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் சுமார் 1000 அபிடவிட்களை புதிதாக தாக்கல் செய்தார்.

மேலும் ஆவணங்களை தாக்கல் செய்ய தங்களுக்கு 3 நாட்கள் அவகாசம் வேண்டும் என கடிதம் கொடுத்தார் அவர். அதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது. அதன்படி மீண்டும் அவகாசம் எடுத்துக்கொண்டு சில ஆவணங்களை டிடிவி தரப்பு தாக்கல் செய்தது.

இப்படி இரு தரப்பும் ஆவணங்களை தாக்கல் செய்து முடித்துவிட்ட நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டபடி இன்று (அக்டோபர் 6) மாலை 3 மணிக்கு இந்த விவகாரத்தில் இறுதிகட்ட விசாரணை நடத்துவதாக இருந்தது. இதற்கிடையே உச்சநீதிமன்றத்தில் இன்று காலையில் டிடிவி தினகரன் தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. தலைமை நீதிபதி அமர்வு முன்பு அவசர வழக்காக அது எடுத்துக் கொள்ளப்பட்டது.

அந்த வழக்கில் டிடிவி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அசோக் தேசாய், ‘இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் பத்தாயிரம் பக்கங்களுக்கும் அதிகமாக ஆவணங்களை தாக்கல் செய்திருக்கிறோம். அவை தொடர்பாக எங்கள் வாதங்களை முன்வைக்க எங்களுக்கு கூடுதல் அவகாசம் தேவை’ என்றார் அசோக் தேசாய்.

அதற்கு தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி ஆட்சேபம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் இன்று விசாரிக்க தடை விதிக்க மறுத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மாலை 3 மணிக்கு பதிலாக மாலை 4 மணிக்கு விசாரிக்கவும் உத்தரவில் கூறப்பட்டது.

எனவே ஏற்கனவே திட்டமிட்ட மாலை 3 மணிக்கு பதிலாக இன்று மாலை 4 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் இந்த விசாரணையை ஆரம்பித்தது. அங்கும் டிடிவி தரப்பு வழக்கறிஞர் விஜய் தேசாய் தங்கள் தரப்பு வாதங்களை வைக்க அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதேசமயம் இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் சி.எஸ்.வைத்தியநாதன், முகுல் ரோஹத்கி ஆகியோர் மாலை 4 மணி முதல் 6 மணி வரை தங்கள் வாதங்களை விரிவாக வைத்தனர்.

முடிவில் அடுத்தகட்ட விசாரணையை அக்டோபர் 13-ம் தேதிக்கு இந்திய தேர்தல் ஆணையம் தள்ளி வைத்தது. அன்று டிடிவி தரப்பு வழக்கறிஞர் தனது வாதங்களை முன்வைக்க இருக்கிறார். தேர்தல் ஆணைய விசாரணை முடிந்து வெளியே வந்த டிடிவி தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் நிருபர்களிடம் கூறுகையில், “நாங்கள் தாக்கல் செய்திருக்கும் ஆவணங்கள் தொடர்பாக வாதம் செய்ய அவகாசம் வேண்டும் என்றுதான் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் முறையிட்டோம். அதே கோரிக்கையை உச்சநீதிமன்றத்திலும் தெரிவித்தோம். இப்போது விசாரணையை தள்ளி வைத்திருப்பதன் மூலமாக எங்களுக்கு அந்த அவகாசம் கிடைத்திருக்கிறது.

இந்த வழக்கை தாமதப்படுத்தும் திட்டம் எங்களுக்கு இல்லை. முழுமையான ஆவணங்களை தயார் செய்துகொண்டு எங்கள் தரப்பு வாதங்களை அடுத்தகட்ட விசாரணையில் வைப்போம்’ என்றார் ராஜா செந்தூர்பாண்டியன்.

 

V K Sasikala Supreme Court Ttv Dhinakaran Two Leaves Symbol
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment