ஓகி தாக்குதலால் 3-வது நாளாக மின்சாரம் இன்றி கன்னியாகுமரி மாவட்டம் தத்தளிக்கிறது. வருகிற திங்கட்கிழமை மதியத்திற்குள் இது சரியாகும்.
ஓகி புயல், கடந்த 30-ம் தேதி காலை 9 மணியளவில் கன்னியாகுமரி மாவட்டத்தை தாக்கியது. இதனால் இயற்கை எழில் சூழ்ந்த கன்னியாகுமரி மாவட்டம் பேரழிவை எதிர்கொண்டிருக்கிறது. மாவட்டத்தின் பிரதான தொழிலான விவசாயம், பெரும் பாதிப்பை சந்தித்தது.
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் வாழைகள் சரிந்தன. மாவட்டத்தின் முக்கிய பணப் பயிரான ரப்பர் மரங்களும் பல இடங்களில் முறிந்து நாசமாகியிருக்கின்றன. தென்னை மரங்களையும்கூட பல இடங்களில் வேரோடு சார்த்து விளையாடிவிட்டது ஓகி. மரங்களும், மின்சார கம்பங்களும் முறிந்து விழுந்ததால் மாவட்டமே மின்சாரம் இன்றி தத்தளிக்கிறது.
கடந்த 30-ம் தேதி முதல், 3-வது நாளாக இன்றும் (2-ம் தேதி) மாவட்டம் முழுவதும் மின்சாரம் இல்லாத நிலை நீடிக்கிறது. இரவில் மெழுகுவர்த்திகள் மூலமாக மக்கள் சமாளித்து வருகிறார்கள். பல இடங்களில் மெழுகுவர்த்தி தட்டுப்பாடும் தலை தூக்கியிருக்கிறது.
தகவல் தொடர்பு சாதனங்கள் மொத்தமாக முடங்கியதால், புயலின் ஆபத்து கன்னியாகுமரிக்கு நீங்கியதா? என்பதைக் கூட முழுமையாக அறிந்து கொள்ள முடியாத நிலையில் அந்த மாவட்ட மக்கள் தவித்தது பெரும் வேதனை. கார்கள் வைத்திருப்போர் மட்டும் தங்கள் கார்களை ‘ஸ்டார்ட்’ செய்து அந்த பேட்டரி மூலமாக செல்போன்களை சார்ஜ் செய்துகொண்டு வெளியுலகை தொடர்புகொண்டனர்.
மின்சாரம் இல்லாத சூழலை சமாளிக்க முடியாத பலரும் சொந்தமாக ஜெனரேட்டர் வாங்கவும் தயாரானார்கள். ஆனால் ஜெனரேட்டர் எங்கும் ஸ்டாக் இல்லை. சில இடங்களில் தனியார்கள் மூலமாக மணிக்கு 600 ரூபாய் வாடகைக்கு ஜெனரேட்டர்கள் வழங்கப்பட்டன. ஒரு மணி நேரத்தில் வீட்டில் உள்ள ‘இன்வெர்ட்டர்’களை சார்ஜ் ஏற்றிக் கொள்ளவும், வாட்டர் டேங்க்-ல் தண்ணீர் ஏற்றிக்கொள்ளவும் 600 ரூபாய் கொடுத்து பலரும் ஜெனரேட்டர்களை வாடகைக்கு அமர்த்தினர்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் பல இடங்களில் இன்னும் வெள்ளம் தேங்கி நிற்பதும், சில இடங்களில் மின் சேவையை உடனே வழங்க முடியாததற்கு காரணம்! எனினும் சாத்தியமான இடங்களில் துரிதமாக மின்சாரம் வழங்க அரசு தரப்பில் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
மின் இணைப்புகளை சரி செய்வது குறித்து அமைச்சர் தங்கமணி இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘மின் இணைப்புகளை சரி செய்ய சுமார் 3000 களப் பணியாளர்கள் வர வைக்கப்பட்டிருக்கிறார்கள். கன்னியாகுமரி நகரத்தில் மின் இணைப்புகளை சரி செய்திருக்கிறோம். நாகர்கோவில் நகரத்தில் இன்று சரி செய்துவிடுவோம்.
மாவட்டம் முழுவதும் நாளை இரவுக்குள் அல்லது திங்கட்கிழமை மதியத்திற்குள் மின் இணைப்பை சரி செய்வோம்.’ என்றார் அமைச்சர் தங்கமணி.
மழையால் பாதிக்கப்பட்ட மக்களை தனி இடங்களில் தங்க வைத்து அவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்யப்படுவதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.