குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுடன் இணைந்து கலந்தாலோசித்து, அதிமுக அம்மா அணி பாஜக-வுக்கு ஆதரவ தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி பாஜக-வுக்கு ஆதரவு அளிப்பதாக ஓ பன்னீர் செல்வமும் அறிவித்தார். இந்த நிலையில், டிடிவி தினகரன் தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்.
இன்று குடியரசுத் தலைவர் தலைவருக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்வு டெல்லியில் நடைபெற்றது. அப்போது, ராம்நாத் கோவிந்த் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, பாஜக மூத்ததலைவர் அத்வானி முன்னிலையில் வேன்புமனு தாக்கல் செய்தார்.
இந்த நிகழ்வில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக புரச்சித் தலைவி அம்மா அணியின் சார்பில் ஓ பன்னீர் செல்வமும் கலந்து கொண்டு தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கெனவே அதிமுக அம்மா அணியின் நிலைப்பாட்டை அறிவித்த நிலையில், டிடிவி தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேல், ‘சசிகலாவின் முடிவையே நாங்கள் ஆதரிப்போம். எடப்பாடி கட்சியில் மூன்றாவது இடத்தில்தான் இருக்கிறார்’ என்று சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தநிலையில், டிடிவி டிடிவி தினகரன் பாஜக-வுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளார். டிடிவி தினகரன் அணியில் 34 எம்எல்ஏ-க்கள் மற்றும் 2 எம்.பி-க்கள் உள்ளனர்.
இதன்மூலம், அதிமுக அம்மா அணியிலும் பிளவு இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. முன்னதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை செய்தியாளர்களிடம் பேசியபோது: கட்சிக்குள் எந்த பிளவும் இல்லை. அனைவரும் ஒன்றிணைந்தே இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்திருந்தார். குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து தலைமைக் கழகம் தான் முடிவு செய்தது என்றும் தெரிவித்திருந்தார்.
முன்பு வந்த செய்தியைக் காண https://www.ietamil.com/tamilnadu/presidential-election-can-not-accept-cm-edappadi-palanisamy-decision-dtv-dinakarans-party/