Advertisment

தமிழக கவர்னருக்கு நெருக்கடி அதிகரிப்பு : நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி இடதுசாரிகள், திருமா, ஜவாஹிருல்லா சந்திப்பு

தமிழக கவர்னருக்கு நெருக்கடியை அதிகரிக்கும் விதமாக எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று சந்தித்து, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட வலியுறுத்தினார்கள்.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
governor vidyasagar rao, rajbhavan, tamilnadu assembly floor test, aiadmk, cm edappadi palaniswamy, opposition met tamilnadu governor

தமிழக கவர்னருக்கு நெருக்கடியை அதிகரிக்கும் விதமாக எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று சந்தித்து, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட வலியுறுத்தினார்கள்.

Advertisment

தமிழக அரசியல் நெருக்கடியான சூழலை எதிர்கொண்டு வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என டிடிவி.தினகரன் அணியைச் சேர்ந்த 19 எம்.எல்.ஏ.க்கள் தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவிடம் தனித்தனியாக கடிதம் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை மெஜாரிட்டிக்கு தேவையான 117-ஐ விட குறைந்திருக்கிறது.

எனவே எடப்பாடி அரசை சட்டமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவிடம் மனு அளித்தனர். இதற்கிடையே டிடிவி.தினகரன் அணியை சேர்ந்த 19 எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சி தாவல் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கான நோட்டீஸை சபாநாயகர் தனபால் அனுப்பினார். மு.க.ஸ்டாலின் உள்பட 21 திமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்திற்கு தடை செய்யப்பட்ட குட்காவை கொண்டு வந்தது தொடர்பாக உரிமைக்குழு மூலமாக நோட்டீஸ் வழங்கப்பட்டிருக்கிறது.

இது போன்ற நடவடிக்கைகளுக்கு ஆளும்கட்சிக்கு அவகாசம் கொடுக்காமல், உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட வேண்டும் என்பதுதான் எதிர்க்கட்சிகளின் கோரிக்கை. அந்த அடிப்படையில் ஸ்டாலின், கே.ஆர்.ராமசாமி, முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ. அபுபக்கர் ஆகியோரை தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 30) இடதுசாரிகளுடன், விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றின் தலைவர்கள் இணைந்து சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையான ராஜ்பவனுக்கு படையெடுத்தனர்.

இன்று காலை 11 மணிக்கு சந்திப்பதற்கு ஏதுவாக நேற்றே இந்தக் கட்சிகளின் தலைவர்கள் சார்பில் கவர்னர் வித்யாசாகர் ராவிடம் ‘அப்பாயின்மென்ட்’ பெறப்பட்டிருந்தது. இன்று காலை 10.45 மணியளவில் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா ஆகியோர் கவர்னர் மாளிகைக்கு வந்தனர்.

காலை 11 மணிக்கு அவர்கள் கவர்னரை சந்தித்தனர். அப்போது, கடந்த பிப்ரவரியில் 11 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை வைத்திருந்த ஓ.பி.எஸ். அணி கோரிக்கை வைத்தவுடன் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட்டதை சுட்டிக்காட்டினர். இப்போது 19 எம்.எல்.ஏ.க்கள் தனித்தனியாக கடிதம் கொடுத்திருப்பதால், எடப்பாடி அரசு மெஜாரிட்டி இழந்துவிட்டது வெளிப்படையாக தெரிகிறது. எனவே குதிரை பேரத்திற்கு வழிவகுக்காமல், உடனே நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இவர்களிடம், ‘சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்’ என கவர்னர் கூறியதாக தெரிகிறது. பா.ஜ.க., அதிமுக தவிர பெரும்பாலான எதிர்க்கட்சிகள் நம்பிக்கை வாக்கெடுப்பை வலியுறுத்தி குரல் கொடுத்து வருவதால், இந்த விஷயத்தில் கவர்னர் வித்யாசாகர் ராவுக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது. ஓரிரு நாளில் கவர்னர் தனது முடிவை அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.

Thirumavalavan Muttharasan G Ramakrishnan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment