தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருச்சி மாவட்ட கிளையின் மாவட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் திருச்சி மாவட்ட தலைவர் சேவியர் பால்ராஜ் தலைமையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணாமலை ஹோட்டலில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நிர்வாகிகள் சிவகுமார், கலியபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளரும், மாநில பொருளாளருமான நீலகண்டன் தீர்மானங்களை விளக்கி பேசினார்.


இதில் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக தமிழக முதலமைச்சர் நிறைவேற்றி ஆசிரியர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களை பணி மாறுதல் என்ற போர்வையில் பந்தாடப்படுவதை நிறுத்தி முறையாக வருகிற மே மாதம் உபரியாக உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களை கலந்தாய்வு நடத்தி அவர்களது பணியை உறுதி செய்ய வேண்டும், மேலும் வருகின்ற ஏப்ரல் 15 ம் தேதிக்குள் உறுப்பினர் சேர்க்கை முடித்து மாவட்ட அமைப்பில் ஒப்படைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் வட்டார கிளை தேர்தல் ஆணையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு ஏற்ப்பளிக்கப்பட்டது.
இக்கூட்டத்திற்கு பொதுச் செயலாளர் முத்துராமசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆசிரியர்கள் சார்பான கோரிக்கைகள் சம்பந்தமாகவும், ஜாக்டோ ஜியோ போராட்ட நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக பேசினார்.
இக்கூட்டத்தில் வட்டாரச் செயலாளர்கள் அமல் சேசுராஜ், சுரேஷ் ராஜ், தேவகி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பங்கு பெற்று சிறப்பித்தனர். நிறைவாக மாநில பொதுக்குழு உறுப்பினர் சரவணன் நன்றி கூறினார்.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“