ஜனவரி மாதம் நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு மாநாட்டில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்பார் என, அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில், பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்பார் என தகவல் வெளியாகின.
இந்நிலையில், திருச்சியில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, வரும் ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார் என தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது, “தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இன்னும், 8 மாவட்டங்களில் நடைபெற வேண்டும். இறுதியாக, ஜனவரி மாதம் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். அந்த நிகழ்ச்சியில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட உள்ளது”, என கூறினார்.
மேலும், முதலமைச்சர் எடப்பாடி பன்னீர் செல்வத்துக்கும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் எந்தவித கருத்துவேறுபாடும் இல்லை எனவும், அரசு விளம்பரங்களில் இருவரது படங்களுமே இடம்பெறுகின்றன எனவும், அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
மேலும், உயிருடன் இருப்பவர்களுக்கு கட்-அவுட்கள், பேனர்கள் வைக்கக்கூடாது என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவு இறுதி தீர்ப்பு அல்ல எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்தது முதல் பல்வேறு மாற்றங்களில் பின்னணியில் பாஜக இருப்பதாக கூறப்பட்டுவரும் நிலையில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பிரதமர் நரேந்திரமோடி கலந்துகொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கது.