மதுரை மாவட்டம் ஆரப்பாளையத்தில் உள்ள சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியில் அங்கன்வாடி மையம் மற்றும் பள்ளி கழிப்பறை, கட்டடங்கள் கட்டப்பட்டன.
இதனை தமிழக நிதி அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் கூறுகையில், “2025 - 26 ஆம் நிதியாண்டில் 1 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் முதலீடுகள் செய்ய வாய்ப்புகள் உள்ளன.
குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான பணிகள் 85 சதவீதம் நிறைவு பெற்றுள்ளன.
அதனை 2023 பட்ஜெட்டில் அறிவிப்பது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்” என்றார்.
மேலும், “ஜெயலலிதா அமல்படுத்திய விஷன் - 2023 என்ற திட்டம் நல்ல திட்டம். அதனை நாங்களும் பின்பற்ற விரும்புகிறோம்” என்றார்.
தொடர்ந்து, “ஜெயலலிதா, கருணாநிதி காலத்தில் நிதி நிலைமை சிறப்பாக இருந்தது. ஜெயலலிதா சிறைக்கு சென்றது, உடல் நலம் இல்லாமல் போனது மற்றும் அவரது மறைவுக்கு பின்னரான 7 - 8 ஆண்டுகளில் நிதி நிலை மிகவும் மோசம் அடைந்தது” என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/