நேற்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ," புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக"தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட இளைஞரின் தந்தை டெல்லியில் நடந்த தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. புதுக்கோட்டையில் இருந்து மட்டும் சுமார் 15 பேர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டதாக அறியப்படுகிறது. முன்னதாக, இந்த 15 பேரும் உடனடியாக மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
புதுக்கோட்டை மருத்துவ வட்டாரங்கள் இதுகுறித்து தெரிவிக்கையில், " நேற்று, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவரின் தந்தைக்கு கொரோனா இல்லை. இந்த இளைஞர் கொரோனா தொற்றுக்கான எந்த அறிகுறியும் காட்டவில்லை. இவரின் மாதிரிகள் பரிசோதனைக்காக கிங் இன்ஸ்டிடியூட் ஆப் ப்ரீவென்டிவ் மெடிசின் மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு, நடந்த பரிசோதனையில் இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது" என்று தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட இளைஞர், தற்போது திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து , புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மிரட்டுநிலை கிராம பஞ்சாயத்தின் 5 கி.மீ சுற்றளவு பகுதியை கட்டுப்பாட்டு மண்டலமாக மாவட்ட நிர்வாகம் மாற்றியுள்ளது.
இதுவரை, தமிழகத்தில் புதுகோட்டை, தருமபுரி, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்கள் கொரோனா வைரஸ் ஆபத்தில் சிக்காமல் இருந்து வந்தன. தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களாக கருதப்படுகிறன.
கிருஷ்ணகிரி மாவட்டமானது கிழக்கே வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களையும், தெற்கே தர்மபுரி மாவட்டத்தையும், மேற்கே கர்நாடக மாநிலத்தையும், வடக்கே ஆந்திர மற்றும் கர்நாடக மாநிலங்களையும் எல்லையாகக் கொண்டுள்ளது. தர்மபுரி மாவட்டம், கிழக்கு பகுதியில் திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டம், மேற்கு பகுதியில் கர்நாடகா மாநிலமும் , வடக்கு பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்டம் , தெற்கு பகுதியில் சேலம் மாவட்டங்களால் சூழப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் எல்லையோர மாவட்டங்கள் பொதுவாக கொரோனா வைரஸ் ஆபத்துக்குள் சிக்கி வரும் நிலையில், தருமபுரி, கிருஷ்ணகிரி முடிவுகள் தமிழக அரசுக்கும், அந்த மாவட்ட மக்களுக்கும் கிடைத்த வெற்றியாகவே கருதப்படுகிறது.
2017-ம் ஆண்டு வெளியிடப் தமிழ் நாட்டின் மனித மேம்பாட்டு அறிக்கையில் கூறப்பட்டிருந்த பல பரிமாண வறுமைக் குறியீட்டில் (Multi-Dimensional Poverty Index ) தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் மிகவும் குறைவான மதிப்பெண்களை பெற்றிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.