புதுச்சேரி பஸ் நிலையத்தில் பட்டப் பகலில் கஞ்சா விற்பனை செய்த ஐந்து பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
இதுகுறித்து உருளையான்பேட்டை இன்ஸ்பெக்டர் பாபுஜி தெரிவித்ததாவது, புதுச்சேரியில் கஞ்சா, போதைப் பொருட்களை ஒழிக்க புதுச்சேரி எஸ்.எஸ்.பி (சட்டம் & ஒழுங்கு) நாரா. சைத்தன்யா, எஸ்.பி (கிழக்கு) ஸ்வாதி சிங் ஆகியோர்களின் அறிவுறுத்தலின் பேரில் புதுச்சேரி போதை பொருள் எதிர்ப்பு பிரிவின் கண்காணிப்பாளர் ஜிந்தா கோதண்டராம், ஆய்வாளர் வெங்கடஜலபதி உதவியோடு கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை தேடிவந்தனர்.
புதன்கிழமை (ஜூலை 26) காலை 9.15 மணியளவில் புதிய பேருந்து நிலையத்தில் கிழக்கு பக்க கழிவறை அருகே உருளையன்பேட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர் ஆர். சந்திரசேகரன் மற்றும் குற்ற பிரிவு காவலர்கள் பிரேம்குமார், சக்திவேலு, செல்லதுரை மற்றும் மணிகண்டன் ஆகியோர் அடங்கிய தனிப்படை, கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்துக்கொண்டிருந்த கும்பலை கண்டறிந்தது.
போலீஸ் வருவதை கண்டு தப்பிக்க முயன்றவர்களில் 5 பேர் போலீஸ் கையில் மாட்டிகொண்டார்கள். அவர்களை விசாரணை செய்ததில் உருளையன்பேட்டை முருகன் கோயில் தெருவை சேர்ந்த அரவிந்த் @ சின்ன அரவிந்த் (22), பெரியார் நகரை சேர்ந்த சுரேஷ்குமார் (27), குருசுக்குப்பத்தை சேர்ந்த ரோமி @ ரெமோ (27), முத்தியால்பேட்டையை சேர்ந்த சசிகுமார் @ பீம் (33) மற்றும் பெரியார் நகரை சேர்ந்த தனுஷ் @ பட்ஜி (20) என தெரியவந்தது.
அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து சுமார் 1.150 கிலோ கஞ்சா அடங்கிய 115 பாலீத்தீன் பொட்டளங்களை கைப்பற்றினார்கள். மேலும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய இரண்டு மொபைல்கள் மற்றும் ஒரு TVS NTORQ மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.
அவர்கள் மீது உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.
விசாரணை செய்ததில் அரவிந்த் தன் நண்பர்களுடன் விசாகப்பட்டினம் அரக் கிராமத்தில் ஒருவரிடம் ரூபாய் 10 ஆயிரம் கொடுத்து 3 கிலோ வாங்கிவந்து இலைகளை 10 கிராம் கஞ்சா இலைகள் அடங்கிய சிறு சிறு பாலீதீன் பாக்கெட்டுகளில் போட்டு இளைஞர்கள் மற்றும் கஞ்சா கஸ்டமர்களுக்கும் விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டார்கள்.
வழக்கில் சிறப்பாக செயல்பட்டு சம்பந்தப்பட்ட எதிரியை கைது செய்த உருளையன்பேட் போலீஸாரை, புதுச்சேரி எஸ்.எஸ்.பி (சட்டம் & ஒழுங்கு) நாரா சைதன்யா மற்றும் எஸ்.பி (கிழக்கு) ஸ்வாதி சிங் பாராட்டினார்கள்.
செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.