யாரையும் அச்சுறுத்துவதற்கோ, மிரட்டுவதற்கோ கொடநாடு வழக்கை ஆயுதமாக பயன்படுத்தவில்லை என்று புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி கூறினார்.
புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ’ஆன்லைன் ரம்மி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது, மாநில அரசுக்கு சட்டம் இயற்ற அதிகாரம் உண்டு என்பதை வழக்கறிஞர்கள் எடுத்துக் கூறுவார்கள்.
அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சிறையில் எந்தவித சிறப்பு சலுகையும் வழங்கப்படவில்லை. முதல் வகுப்பு சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் என்கிற முறையிலோ, திமுகவைச் சேர்ந்தவர் என்கிற முறையிலோ அவருக்கு கூடுதலாக எந்தவித சிறப்பு சலுகையும் வழங்கப்படவில்லை.
செந்தில்பாலாஜி வழக்கு உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் இருப்பதால், அவருக்கு ஏதாவது இடையூறு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஊடகங்களுக்கும், பத்திரிக்கைகளுக்கும் தவறான தகவலை பரப்புவதன் மூலம் அவர் சிறையில் சொகுசு வாழ்கை வாழ்கிறார் என்ற மாயதோற்றத்தை உருவாக்கப் பார்கிறார்கள்..
கோடநாடு விவகாரத்தில் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நடந்தது என்ன என்பதை எவ்வளவு பெரிய முக்கிய பிரமுகர்களாக இருந்தாலும் அவர்களை வெளியுலகத்திற்கு கொண்டு வந்து தெளிவுபடுத்துவோம்.
தேர்தல் அறிக்கையில் கூறியதை செய்கிறபோது, கோபப்படுவதில் நியாயம் இல்லை. இது, பழிவாங்கும் போக்கு என்று கூறுவது ஏற்புடையதல்ல என்றார். யாரையும் அச்சுறுத்துவதற்கோ, மிரட்டுவதற்கோ கோடநாடு வழக்கை ஆயுதமாக பயன்படுத்தவில்லை.
அம்பேத்கர் படம் தொடர்பான பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது. முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் தலைமை நீதிபதியை சந்தித்து கலந்து ஆலோசித்தேன். அம்பேத்கர் படம் உள்ளிட்ட எந்த புகைப்படங்களையும் நீதிமன்றங்களில் இருந்து அகற்ற எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. இது தொடர்பாக முதல்வருக்கு எடுத்து சொல்லி விடுங்கள் என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். இவ்வாறு அமைச்சர் ரகுபதி கூறினார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“