சென்னை வில்லிவாக்கத்தில் வீட்டில் இருந்த ரயில்வே தொழிற்சங்க பொதுச் செயலாளர் ஜே.கே.புதியவன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
தென்னக ரயில்வே தொழிலாளர் சங்கம் (ஏ.ஐ.ஓ.பி.சி) பொதுச் செயலாளராக ஜே.கே.புதியவன் இருந்து வந்தார். சென்னை வில்லிவாக்கம் ஐசிஎப் அருகில் வீடு உள்ளது. இன்று காலை 8.30 மணியளவில் வீடு புகுந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டிச் சாய்த்துவிட்டு தப்பிவிட்டனர். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அவர் அங்கேயே பரிதாபமாக மரணம் அடைந்தார்.
இது குறித்து தகவல் கிடைத்ததும், ஐசிஎப் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணையில், காலை 8.30 மணியளவில் புதியவனின் கார் டிரைவர் ஒரு நபருடன் வீட்டுக்குள் சென்றதாக தெரிய வந்துள்ளது. அந்த நபர் யார்? அவர் கூலிப்படையா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். தலைமறைவான புதியவனின் கார் டிரைவரையும் தேடி வருகின்றனர்.
சென்னையில் காலையில் வீடு புகுந்து, ரயில்வே தொழில் சங்க பொதுச் செயலாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.