நடிகர் ரஜினிகாந்த், நேற்று (டிச.,31) ரசிகர்கள் முன்னிலையில் தனது அரசியல் பிரவேசத்தை உறுதி செய்தார். அப்போது பேசிய ரஜினி, "நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். தனிக்கட்சித் தொடங்கி வரும் சட்டமன்ற தேர்தலில், 234 தொகுதியிலும் போட்டியிடுவேன்" என்று அறிவித்தார். மேலும், என்னை வாழ வைத்த தமிழ் மக்களுக்காக நல்லது செய்ய, குறைந்தபட்சம் ஒரு முயற்சி கூட நான் எடுக்கவில்லை என்றால், நான் சாகும் வரை அந்த குற்ற உணர்ச்சி என்னை உறுத்திக் கொண்டே இருக்கும்" என்றார்.
தொடர்ந்து பேசிய ரஜினி, "அதற்கு முன், நமது பதிவு செய்யப்படாத மன்றங்கள் பதிவு செய்யப்பட வேண்டும். ஏழை, பணக்காரர், படித்தவர், படிக்காதவர், ரசிகர்கள், மாற்றத்தை விரும்புபவர்கள் என அனைவரையும் நமது மன்றங்களில் இணைக்க வேண்டும். தமிழகத்தின் ஒவ்வொரு தெருவிலும் நமது மன்றம் இருக்க வேண்டும். இதுதான் நான் ரசிகர்களுக்கு அளிக்கும் முதல் பணி" என்று பேசினார்.
நேற்று ரஜினி இவ்வாறு பேசியிருந்த நிலையில், மறுநாளான இன்றே அதற்கான அடுத்தக் கட்ட அறிவிப்பை ரஜினி வெளியிட்டுள்ளார். அதாவது, "www.rajinimandram.org" என்ற புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதில் விருப்பமுள்ள உறுப்பினர்கள் தங்களை இணைத்துக் கொள்ளலாம் என இன்று ரஜினி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை ட்விட்டரில் வீடியோவாக அவர் வெளியிட்டுள்ளார்.