முன்னாள் பிரதர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு, அந்த தண்டனை காலம் முடிந்தும் விடுதலை செய்யப்படவில்லை. இதையடுத்து, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ் தேசிய அமைப்புகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் நரம்பியல் நோய்களால் பாதிக்கப்பட்டு கடந்த 16 மாதங்களாக படுத்த படுக்கையாக உள்ள தனது தந்தையை பார்க்க 30 நாட்கள் பரோலில் விட வேண்டும் என்று சிறைத் துறையினரிடம் பேரறிவாளன் மனு அளித்து இருந்தார். அவரது மனுவை கடந்த ஜூன் 21-ம் தேதி, தமிழக அரசு நிராகரித்தது. இதற்கு பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தும், பேரறிவாளனை விடுவிக்கக் கோரி அற்புதம்மாள் மனு அளித்திருந்தார்.
இந்த நிலையில், பேரறிவாளனுக்கு இன்று பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 26 ஆண்டுகளில் முதன்முறையாக பேரறிவாளனுக்கு தற்போது பரோல் வழங்கப்பட்டுள்ளது. ஒருமாத காலம் அவருக்கு பரோல் வழங்கப்படுவதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவித்துள்ளார். பரோலில் விடுவிக்க உத்தரவிட்டுள்ள அரசாணை வேலூர் மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேரறிவாளன் வழக்கறிஞர் பிரபு கூறிய போது, "30 நாள் பரோல் என்பது பேரறிவாளனுக்கு மிகவும் முக்கியமான ஒன்று. தமிழக அரசின் அட்வகேட் ஜெனரலின் சட்ட ஆலோசனை பெற்று பரோல் தரப்பட்டது.
இதுவொன்றும் பேரறிவாளனுக்கு கிடைத்த சிறப்பு சலுகை கிடையாது. சிறைவாசிக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமை தான்.தந்தையின் உடல் நிலை காரணமாக பரோல் கிடைத்துள்ளது" என்றார்.
பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் அளித்த பேட்டியில், "அதிகாரப்பூர்வ அறிவிப்பு எனக்கு இன்னும் வரவில்லை. என் மகனை காண 26 ஆண்டுகளாக காத்திருக்கிறேன். ஒரு மாத காலம் பரோல் கேட்டிருந்தேன். இதற்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றி. ஆனால், என் மகன் வீட்டு வாசற்படியை மிதிக்கும் வரையில் இதை நான் நம்பமாட்டேன். ஏனெனில், நான் அவ்வளவு முறை ஏமாற்றப்பட்டுள்ளேன்" என்று வேதனையோடு தெரிவித்தார்.