ஜீவசமாதி அடையும் நோக்கில், சிறையில் தொடர்ந்து நான்காவது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் முருகனது உடல்நிலை மோசமடைந்து வருகிறது.
கடந்த 1991-ஆம் ஆண்டு மே 21-ம் தேதியன்று, சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில், முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி மீது நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் அவர் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 49 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 7 பேரில் மூவருக்கு மரண தண்டனையும், மற்ற நால்வருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
இதையடுத்து, ராஜீவ் , ராஜீவ் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரது மரண தண்டனையை கடந்த 2014-ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக மாற்றி உத்தரவிட்டது. இதற்கு பின்னர், இவர்களை விடுதலை செய்யக் கோரி பல போராட்டங்கள் தமிழகத்தில் நடந்துள்ளன. அந்த போராட்டங்களுக்கு எதிராக விமர்சனங்களும் எழுந்துள்ளன.
ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலிருக்கும் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக சட்டப்பேரவையில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும், அவர்களது விடுதலையில் தொடர்ந்து இழுபறி நிலவி வருகிறது.
இந்நிலையில், "26 ஆண்டுகள் சிறை வாழ்க்கையால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். எனக்கு விடுதலை கிடைக்காது என்பதால் சிறையில் உண்ணாவிரதம் இருந்து ஜீவ சமாதி அடைய அனுமதி வழங்க வேண்டும்" என சிறைத் துறை உயர் அதிகாரிகளுக்கு முருகன் கடிதம் அனுப்பினார். ஆனால், அந்த கடிதத்துக்கு இதுவரை பதில் தெரிவிக்கப்படவில்லை.
இதையடுத்து, திட்டமிட்டபடி கடந்த 18-ம் தேதியன்று தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முருகன் தொடங்கினார். தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் உண்ணாவிரதம் இருந்து வரும் அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதனால், வேலூர் அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. உண்ணாவிரதம் இருக்கும் முருகன் அறைக்கு தனி போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
முருகன் தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டால் சிறைத்துறை சலுகைகள் குறைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.