ராமநாதபுரம்: சவுக்கு மரங்களை வெட்டி கடத்தியவருக்கு ரூ.3.30 லட்சம் அபராதம்
ச. மார்ட்டின் ஜெயராஜ் – ராமநாதபுரம் மாவட்டம்
Advertisment
வனத்துறை நடவு செய்த 125 பச்சை சவுக்கு மரங்களை வெட்டி கடத்திய ராஜேஸ் பிரபு என்பவருக்கு 10 மடங்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலர் ஹேமலதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ராமநாதபுரம் வனக்கோட்ட கட்டுப்பாட்டில் உள்ள ஆர்.எஸ்.மங்கலம் வனச்சரகம் சோழந்தூர் பிரிவில் களப்பணியாளர்கள் ரோந்து பணி மேற்கொண்டபோது வேலாங்குடி கிராமத்தில் வனத்துறை மூலம் நடவு செய்யப்பட்ட 125 பச்சை சவுக்கு மரங்கள் (சுற்றளவு 70 முதல் 80 செ.மீ) ராஜேஸ் பிரபு, த/பெ.சுந்தர்ராஜன், தொண்டி என்பவரால் வெட்டப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இச்செயல் தமிழ்நாடு வனச்சட்டம் 1882-ன் கீழ் எதிரானது என்பதால் குற்றவாளிக்கு ரூ.3,30,210/- இணக்கக்கட்டணம் விதிக்கப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது.
Advertisment
Advertisements
மேற்படி சவுக்கு மர தோட்டங்கள் கடல் காற்றினால் விவசாயத்திற்கு ஏற்படும் பாதிப்பினை தடுக்கும் நோக்கில் காற்று தடுப்பு தோட்டங்களாக வனத்துறை மூலம் அமைக்கப்பட்டவையாகும். இத்தோட்டங்கள் கடல் சீற்றம் மற்றும் அதனால் ஏற்படும் மண் அரிப்பை தடுக்க வல்லவை. மேலும், இத்தோட்டங்கள் காற்றின் வேகத்தினை 60 முதல் 80 சதவீதம் வரை குறைக்க கூடியவை.
மேலும் இத்தோட்டங்கள் அயல்நாட்டு பறவைகள் மற்றும் பிற உயிரினங்களுக்கு புகழிடமாக அமையப்பெற்றவை. எனவே, இத்தோட்டங்களில் உள்ள மரங்களை அழித்தல் சூழலியல் பாதிப்பிற்கு வழிவகுக்கும். இனி வருங்காலங்களில் இத்தகைய அரசு மர தோட்டங்களுக்கு சேதம் விளைவிப்போர் மீது சட்டத்திற்குட்பட்டு கடுமையான தண்டனைகள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது." என்று தெரிவித்துள்ளார்.
125 பச்சை சவுக்கு மரங்களின் மதிப்பு ரூ. 33,021 ஆகும். அதன்படி, 10 மடங்கு அபராதமாக ரூ. 3, 30,210 விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil