ஆர்.கே.நகர் அதிமுக வேட்பாளரை நவம்பர் 29-ம் தேதி அறிவிக்க, தலைமைக் கழகத்தில் நடந்த இபிஎஸ்-ஓபிஎஸ் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவானது.
சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே.நகர்) இடைத்தேர்தல் டிசம்பர் 21-ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்தல் அட்டவணை வருமாறு:
வேட்புமனு தாக்கல் தொடக்கம் : நவம்பர் 27 (இன்று), வேட்புமனு தாக்கல் கடைசி நாள் : டிசம்பர் 4, வேட்புமனுக்கள் பரிசீலனை : டிசம்பர் 5, வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் : டிசம்பர் 7, வாக்குப் பதிவு : டிசம்பர் 21, வாக்கு எண்ணிக்கை : டிசம்பர் 24.
ஆர்.கே.நகரில் திமுக சார்பில் கடந்த ஏப்ரலில் நிறுத்தப்பட்ட தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மருது கணேஷ் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மீண்டும் போட்டியிடுவதாக கூறியிருக்கிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
அதிமுக சார்பில் ஓபிஎஸ் ஆதரவாளரும் கட்சியின் அவைத்தலைவருமான மதுசூதனனை மீண்டும் அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இன்று (27-ம் தேதி) சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளின் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.
இரட்டை இலை மீட்புக்கு பிறகு நடந்த முதல் கூட்டம் என்ற அடிப்படையில் இந்தக் கூட்டத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் இதில் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தையொட்டியே ஆட்சிமன்றக் குழுவையும் கூட்டி, மதுசூதனனை வேட்பாளராக முறைப்படி தேர்வு செய்ய இருப்பதாக கூறப்பட்டது.
ஆனால் இபிஎஸ் தரப்பு சீனியர்கள் பலரும், முறைப்படி விருப்பமனு தாக்கல் செய்யும் வாய்ப்பை கட்சி நிர்வாகிகளுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஓபிஎஸ் தரப்போ, ‘ஏற்கனவே அறிவிக்கப்பட்டு நிறுத்தப்பட்ட தேர்தல் என்ற அடிப்படையில், விருப்ப மனுச் சடங்கு அவசியமில்லை. திமுக.வைப் போல வேட்பாளரை அறிவிக்கலாம்’ என வற்புறுத்தியதாக தெரிகிறது.
ஆனால் கூட்டத்தின் முடிவில் இன்றும், நாளையும் (27,28-ம் தேதிகள்) விருப்ப மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஆர்.கே.நகரில் போட்டியிட விரும்பும் கட்சிக்காரர்கள் இந்த இரு நாட்களும் அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு தாக்கல் செய்யலாம். 29-ம் தேதி அந்த மனுக்களை பரிசீலனை செய்து, ஆட்சிமன்றக் குழு வேட்பாளரை முடிவு செய்யும்.
ஆட்சி மன்றக் குழுவில் தற்போது இபிஎஸ் அணியினரே முழுமையாக இருக்கிறார்கள். எனவே 29-ம் தேதி கூடும் ஆட்சி மன்றக் குழுவில் ஓபிஎஸ் அணியினருக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்படும் எனத் தெரிகிறது