ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனுத் தாக்கலுக்கு நிறைவு நாளில் மட்டும் 107 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு டிசம்பர் 21-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நவம்பர் 27-ம் தேதி தொடங்கி, இன்றுடன் (டிசம்பர் 4) முடிந்தது. முதல் 7 நாட்களில் 38 பேர் மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர். எனவே இந்த முறை சுயேட்சைகள் மத்தியில் அதிகம் ஆர்வம் இல்லை என பேசப்பட்டது.
ஆனால் வேட்புமனுத் தாக்கல் நிறைவு நாளான இன்று (டிசம்பர் 4) தேர்தல் அலுவலகமே திணறும் அளவுக்கு சுயேட்சைகள் திரண்டனர். நடிகர் விஷால், ஜெ.தீபா ஆகியோரும் தங்களைப் போல வரிசையில் நின்று வேட்புமனுத் தாக்கல் செய்யவேண்டும் என சுயேட்சைகள் போராட்டம் நடத்தும் அளவுக்கு நிலைமை சென்றது. பிறகு அவர்களும் வரிசையில் நின்றார்கள்.
பிற்பகல் 3 மணியுடன் வேட்புமனுத் தாக்கல் நேரம் முடிவுக்கு வந்ததால், அந்த நேரத்திற்குள் வந்த வேட்பாளர்கள் அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டது. இன்று ஒரே நாளில் மொத்தம் 107 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஏற்கனவே முதல் ஒரு வாரத்தில் தாக்கல் ஆன 38 வேட்புமனுக்களையும் சேர்த்து, மொத்தம் 145 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
சுயேட்சைகளில் பலரும் தொப்பி சின்னத்தை தங்களின் விருப்பமாக கேட்டிருக்கிறார்கள். கடந்த முறை ரத்தான தேர்தலின்போது டிடிவி தினகரன் தொப்பி சின்னத்தை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முறையும் தொப்பி சின்னத்தையே டிடிவி தினகரன் விரும்புகிறார். எனவே தொப்பி சின்னத்தை கேட்கும் இதர சுயேட்சைகளிடம் இறுதிகட்டத்தில் டிடிவி தரப்பு ‘பேச்சுவார்த்தை’ நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எதிர்பார்ப்பிலேயே கடைசி நாளில் சுயேட்சைகளில் சிலர் படையெடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
வேட்புமனுவை வாபஸ் பெற டிசம்பர் 7-ம் தேதி கடைசி நாள்! ஒருவேளை தொப்பி சின்னத்தை பட்டியலில் இருந்தே தேர்தல் ஆணையம் நீக்கிவிட்டா, சுயேட்சைகளில் சிலர் தங்கள் மனுவை வாபஸ் பெற்றுவிட வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள். தவிர, முக்கிய கட்சிகளுக்கு சாதகமாக ஏஜெண்டுகளை அனுப்புவது உள்ளிட்ட வசதிகளுக்காகவும் சில சுயேட்சைகள் உதவக்கூடும் என தெரிகிறது.
அதிமுகவின் மதுசூதனன், திமுக.வின் மருது கணேஷ், பாஜக.வின் கரு.நாகராஜன், நடிகர் விஷால், ஜெ.தீபா, நாம் தமிழர் கட்சியின் கலைக்கோட்டுதயம், டிடிவி தினகரன் என 7 முனைப் போட்டிக்கு ஆர்.கே.நகர் தயாராகிறது.