இரட்டை இலை வழங்கிய பிறகு ஆர்.கே.நகர் தேர்தலை நடத்துவதாக கூறினால், அது ஜனநாயகப் படுகொலை என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார்.
தி.மு.க. செயல் தலைவரும் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், சென்னையில் இன்று தனது கொளத்தூர் தொகுதியில் அரசு திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
‘வில்லிவாக்கத்தில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க ரெயில்வே பட்ஜெட்டில் ரூ.7 கோடியே 35 லட்சம் ஒதுக்கப்பட்டது. அந்தப் பணி நடந்து வருகிறது. அதை விரைவில் முடிக்க அதிகாரிகளை கேட்டுக் கொண்டேன்.
மாநகராட்சி மூலம் நடை பெறும் பணிகள், குடிநீர் வாரியம் மூலம் நடைபெறும் பணிகளையும் ஆய்வு செய்தேன். இதில் ஓரளவு முன்னேற்றம் உள்ளது.
ஒரு வருடமாக மாநகராட்சிக்கு கவுன்சிலர்கள் இல்லை. சென்னை மட்டுமல்ல தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முயற்சிக்காதது வேதனைக்குரியது. இந்த ஆட்சியில் 2 முறை மழை வெள்ள புயலால் எந்த அளவுக்கு மக்கள் பாதிக்கப்பட்டனர் என்பதை அனைவரும் அறிவார்கள். அது போன்ற சூழல் மீண்டும் வந்து விடக்கூடாது. எனவே தி.மு.க.வினரும், பொதுநல அமைப்பினரும் முன் எச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். இந்த அரசை நம்பி பிரயோஜனம் இல்லை.’ என்றார் ஸ்டாலின்.
‘இரட்டை இலை சின்னம் யாருக்கு என தெரிந்த பிறகுதான் டிசம்பர் 31-ந்தேதிக்குள் ஆர்.கே.நகர் தொகுதிக்கு தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் கூறி இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளதே?’ என நிருபர்கள் கேட்டனர். அதற்கு ஸ்டாலின், ‘அப்படி அவர் சொன்னதாக தெரியவில்லை. அது போல் கூறமுடியாது. அவ்வாறு கூறி இருந்தால் அது ஜனநாயக படுகொலை.’ என்றார்.
தொடர்ந்து, ‘ஆர்.கே.நகரில் ரூ.89 கோடிக்கு பணம் பட்டுவாடா செய்ததற்கான ஆவணத்தை வருமான வரிதுறையினர், குட்கா பாஸ்கர்... மன்னிக்கனும்! டெங்கு பாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தி கைப்பற்றினார்கள். அந்த ஆவணத்தை மையமாக வைத்து இடைத்தேர்தலை நிறுத்தினார்கள். இதற்கு வழக்கு உண்டா? எப்.ஐ.ஆர். உண்டா? ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை?’ என கேள்விகளை எழுப்பினார் ஸ்டாலின்.
‘காசிமேடு மீனவர்கள் மீதான தடியடிக்கு தி.மு.க. சதிதான் காரணம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறி இருக்கிறாரே?’ என நிருபர்கள் கேட்டபோது, ‘ஜெயக்குமார் சூப்பர் முதல்-அமைச்சர் அல்ல. டூப்பர் முதல்-அமைச்சர் ஆக உள்ளார். அவருக்கு பதில் சொல்ல விரும்பவில்லை.’ என முடித்துக்கொண்டார் ஸ்டாலின்.