ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மருது கணேஷுக்கு ஆதரவு கொடுப்பதாக விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்தார்.
சென்னை, ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்கு டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. வேட்புமனுத் தாக்கலுக்கு இன்னும் இரு நாட்களே(நவம்பர் 27) இருக்கிறது. எனவே கட்சிகள் வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில் இறங்கியிருக்கின்றன.
திமுக சார்பில் கடந்த ஏப்ரலில் நடைபெறுவதாக இருந்த தேர்தலில் பகுதி செயலாளரான மருது கணேஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் தேர்தல் ரத்து செய்யப்பட்டதால், பிரசாரத்தை முழுமையாக முடித்த நிலையில் அவரால் தேர்தலில் பங்கு பெற முடியாமல் ஆகிவிட்டது.
இந்தத் தேர்தலில் ஆர்.கே.நகர் வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து ஆலோசிக்க இன்று சென்னையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் வட சென்னை திமுக நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டு இதில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்
காலை 10.30 மணி முதல் 11.30 வரை சுமார் 1 மணி நேரம் இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். கடந்த முறை ஆர்.கே.நகரில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மருது கணேஷ், அதற்கு முன்பு ஜெயலலிதாவை எதிர்த்து இதே தொகுதியில் போட்டியிட்ட சிம்லா முத்துச்சோழன் ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் முடிவில் ஆர்.கே.நகர் திமுக வேட்பாளராக மருது கணேஷ் அறிவிக்கப்பட்டார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் பேசுகையில், ‘காங்கிரஸ் ஏற்கனவே திமுக.வுக்கு ஆதரவு கொடுத்திருக்கிறது. மற்றக் கட்சிகளிடமும் ஆதரவு கேட்போம்’ என்றார்.
அவர் சொன்னது போலவே திருமாவளவனை பின்னர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார் ஸ்டாலின். விடுதலை சிறுத்தைகளின் ஆதரவை கேட்டு கடிதமும் கொடுத்து அனுப்பினார். இதைத் தொடர்ந்து இன்று பிற்பகலில் நிருபர்களிடம் பேசிய திருமாவளவன், ‘ஸ்டாலின் தொலைபேசியில் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் திமுக.வுக்கு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆதரவு கொடுக்கிறோம்’ என்றார்.
தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியனவும் ஆதரவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.