/tamil-ie/media/media_files/uploads/2017/08/z22.jpg)
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரயில் பயணி ஒருவரிடம் வழிப்பறி செய்யப்பட்டிருக்கிறது. வழிப்பறி செய்திருப்பது வேறு யாரும் அல்ல... சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தமிழ்நாடு சிறப்புப் படை காவலர்கள் தான்.
சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்வது வழக்கம். வட மாநிலங்களில் இருந்து வரும் ரயில்கள், சென்ட்ரல் ஸ்டேஷனைத் தான் வந்தடையும். இதனால், அங்கு வடமாநிலத்தவர்களை அதிகம் காண முடியும்.
இந்நிலையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பீரேந்திர ரெட்டி என்ற பயணி, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் அறையில் தனது ரயிலுக்காக காத்திருந்திருக்கிறார். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தமிழ்நாடு சிறப்புப் படை காவலர்களான இருதயராஜ், அருள்தாஸ், ராமலிங்கம் ஆகியோர், பீரேந்திர ரெட்டியை மிரட்டி அவரிடம் இருந்த பணம் மற்றும் செல்போனை கேட்டிருக்கின்றனர். அவர் மறுக்கவே, மூவரும் சேர்ந்து அவரைத் தாக்கி, பணம் மற்றும் செல்போனை வழிப்பறி செய்திருக்கின்றனர்.
உடனே, பீரேந்திர ரெட்டி ரயில்வேத்துறை ஐ.ஜியான பொன்மாணிக்கவேலிடம் நேரடியாக புகார் அளித்திருக்கிறார். இதையடுத்து, அந்த மூன்று காவலர்களையும் கைது செய்ய பொன்மாணிக்கவேல் உத்தரவிட்டார்.
உடனடியாக கைது செய்யப்பட்ட அந்த மூன்று தமிழ்நாடு சிறப்புப் படை காவலர்களான இருதயராஜ், அருள்தாஸ், ராமலிங்கம் ஆகியோர், புழல் சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளனர்.
ஆயிரக்கணக்கனோர் வந்து செல்லும் சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார்களே வழிப்பறி செய்திருப்பது பொதுமக்கள் இடையே மிகுந்த அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.