திருச்சி அரசு அலுவலகத்தில் ரூ.58 ஆயிரம் பறிமுதல்; லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை
தமிழகம் முழுவதும் தீபாவளி முன்னிட்டு அரசு அலுவலகங்களில் பரிசு பொருட்கள் வருகின்றதா என்ற சோதனையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஈடுபட்டனர்.
இதில் திருவாரூரில் மட்டும் ரூ.75 லட்சத்திற்கும் மேல் கணக்கில் வராத ரொக்கம் பிடிபட்டது. தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக ரூபாய் ஒரு கோடிக்கு மேல் ரொக்கம் கைப்பற்றப்பட்ட நிலையில், திருச்சியில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ 58 ஆயிரம் அரசு அலுவலரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்த விபரம் வருமாறு: திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் கோட்ட அலுவலகத்தில் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
திருச்சி லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில் 8 போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் வீடு வழங்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்களில் பயனாளிகளுக்கு வீடு ஓதுக்கீடு செய்வதில் முறைகேடு நடைபெறுவதாக புகார் வந்ததையெடுத்து திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
இதில் உதவி நிர்வாக பொறியாளர் முருகானந்தம் மற்றும் வீடு ஒதுக்கீடு அதிகாரியான கற்பகவிநாயகம் ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் உதவி நிர்வாக பொறியாளர் அறையில் இருந்து கணக்கில் வராத ரூ.58 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. மாலை 4 மணிக்கு தொடங்கி நள்ளிரவு வரை தொடர்ந்து சோதனை மேற்கொண்டு அவர்களிடம் விசாரணையில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் நள்ளிரவு வரை நடைபெற்ற இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத 1,12,57,803 ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது.
தீபாவளி பரிசுகள் விவகாரமாக நடத்தப்பட்ட ரெய்டால் திருச்சியில் உள்ள அரசு அலுவலக அலுவலர்கள் மத்தியில் பரபரப்பும், சுறுசுறுப்பும் ஏற்பட்டுள்ளது.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil