New Update
/indian-express-tamil/media/media_files/rf7Jza6TsBPXIrNPGMWv.jpg)
சபரிமலை சீசன் தொடங்கி உள்ள நிலையில் கோவை மொத்த மீன் விற்பனை சந்தையில் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. மீன், கோழி, ஆடு இறைச்சி விலை குறைந்துள்ளது.
கோவை உக்கடம் லாரி பேட்டை பகுதியில் மொத்த மீன் விற்பனை சந்தை இயங்கி வருகிறது. உக்கடம் பேரூர் பிரதான சாலையில் சில்லறை மீன் சந்தை உள்ளது. கோவையில் உள்ள மீன் சந்தைகளுக்கு ராமேஸ்வரம், கன்னியாகுமாரி, தூத்துக்குடி, கடலூர் மற்றும் கேரளாவில் உள்ள கொச்சி, சாவக்காடு ஆகிய பகுதிகளில் இருந்து தினந்தோறும் 15 டன் வரை மீன் வகைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.
இங்கு அவை தரம் பிரிக்கப்பட்டு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஏலம் அடிப்படையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உக்கடம் லாரிப்பேட்டை, பேரூர் பிரதான சாலையில் உள்ள மீன் விற்பனை சந்தைகளில் 24 மணி நேரமும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும்.
சனி, ஞாயிறு ஆகிய வார விடுமுறை நாட்களில் வாடிக்கையாளர்கள் அதிகம் வருவர். தங்களுக்குப் பிடித்த மீன் வகைகளை வாங்கி செல்வார்கள். இந்த நிலையில் ஐயப்ப சுவாமிக்கு உகந்த கார்த்திகை மாதம் பிறந்துள்ளது. இம்மாதம் பலர் சபரிமலைக்கு மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் இருந்து கோயில் செல்வர். இந்த நாட்களில் பக்தர்கள் அசைவம் சாப்பிட மாட்டார்கள்.
கோவை மாவட்டத்தில் பெரும்பாலான ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிவித்து விரதம் அனுசரித்து வருவதால் இங்கு உள்ள இறைச்சி கடைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. விற்பனை கடையில் உள்ள மீன் வகைகள் விளையும் கணிசமான அளவு குறைந்துள்ளது.
உக்கடம் மீன் சந்தையில் ஒரு கிலோ வஜ்ரம் மீன் ரூ.700, வாவல் ரூ.500, கருப்பு வாவல் ரூ.300, பாறை மீன் ரூ200, ஊழி ரூ 100, மத்தி ரூ 100, நெத்திலி ரூ 150, சங்கர ரூ180, செம்மீன் ரூ 300 என்ற விலைக்கு விற்கப்படுகிறது. மீன் மட்டுமல்லாது மற்ற இறைச்சி விலையும் குறைந்துள்ளது. கோழி கடந்த வாரம் ரூ.200க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ஒரு கிலோ 150 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆட்டு இறைச்சியும் கிலோ ரூ.800 என்ற விலையில் விற்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.