இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதி மூலம், பெரம்பலூர் மாவட்டத்தில் தார் சாலை போட ரூ.21 லட்சத்து 70 ஆயிரம் ஒதுக்கீடு செய்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான சச்சின் டெண்டுல்கருக்கு நாடு முழுவதும் ரசிகர்கள் ஏராளம் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. களத்தில் சச்சின் இறங்கும் போது அரங்கத்தில் ஆர்பரிக்காத ரசிகர்களே இருக்க மாட்டார்கள். விளையாட்டுத் துறையில் ஆற்றிய பங்கிற்காக சச்சினுக்கு காங்கிரஸ் ஆட்சியின் போது, அவருக்கு கௌரவ எம்பி பதவி வழங்கப்பட்டது.
விளையாட்டுத் துறையில் செய்த சாதனையை எம்பி பதவி செய்தாரா? என்றால் அது கேள்விக்குறி தான். காரணம், சச்சின் சரிவர நாடாளுமன்றத்திற்கு வருவதில்லை என்றும், அவருக்கு வழங்கப்பட்ட எம்பிக்கான தொகுதி வளர்ச்சி நிதியை பயன்படுத்துவதில்லை என்றும் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கோல்டன் சிட்டி பகுதியில் தார்ச்சாலை அமைக்குமாறு, அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்தனர்.ஆனால் கோல்டன்சிட்டி பகுதி ஊராட்சியை சேர்ந்தது என்பதால், அந்த பகுதியில் தார்ச்சாலை அமைக்க மாவட்ட நிர்வாகத்தால் லட்சக்கணக்கான ரூபாய் செலவிட முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.
அப்போது தான் அந்த பகுதியை சேர்ந்த ஒருவர், தனது நண்பர் மூலம் பிரபல கிரிக்கெட் வீரரும், மாநிலங்களவை உறுப்பினருமான சச்சின் தெண்டுல்கருக்கு கோரிக்கை ஒன்றை வைத்தார். அதில் கோல்டன் சிட்டி பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணிக்கு தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்குமாறு வேண்டுக்கோள் விடுத்தார்.
இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட சச்சின், கோல்டன் சிட்டி பகுதியில் தார்சாலை அமைக்கும் பணிக்கு தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.21 லட்சத்து 70 ஆயிரத்தை சச்சின் தெண்டுல்கர் ஒதுக்கீடு செய்தார். அந்த நிதியின் மூலம் அப்பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
3.75 மீட்டர் அகலத்தில், 500 மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டு வரும் சாலைகளை சச்சின் நேரில் பார்வையிட வருவார் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. சாலை அமைக்க நிதி ஒதுக்கிய சச்சின் டெண்டுல்கருக்கு அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர்.