சைலேந்திரபாபு, கரன்சின்கா, ராஜேஸ்தாஸ், அம்ரேஷ் பூஜாரி உள்ளிட்ட கூடுதல் டிஜிபி.க்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
தமிழக அரசு நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு சிறைத்துறை இயக்குனராக இருந்து வந்த டாக்டர் சி.சைலேந்திரபாபு, தமிழக ரயில்வே போலீஸ் கூடுதல் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். அமலாக்கப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்த அசுதோஷ் சுக்லா, தமிழக சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக பொறுப்பேற்பார்.
தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை விஜிலன்ஸ் அதிகாரியாக இருந்து வந்த கே.பி.மகேந்திரன், தீயணைப்புத்துறை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். ரெயில்வே போலீஸ் கூடுதல் டி.ஜி.பி.யாக பணிபுரிந்த லட்சுமி பிரசாத், தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை விஜிலன்ஸ் அதிகாரியாக பதவியேற்பார்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றும் கரன்சின்கா, போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு கூடுதல் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு கூடுதல் டி.ஜி.பி.யான அமரேஷ் பூஜாரி, மாநில குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக பொறுப்பேற்பார்.
தமிழ்நாடு போலீஸ் போக்குவரத்து பிரிவு சிறப்பு அதிகாரியாக பணிபுரிந்து வந்த ராஜேஷ்தாஸ், அமலாக்கப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக பதவியேற்பார். மாநில குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யான சுனில்குமார், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
அமலாக்கப்பிரிவு ஐ.ஜி.யாக இருந்து வந்த சங்கர், சேலம் போலீஸ் கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். சேலம் போலீஸ் கமிஷனராக பணிபுரிந்து வந்த சஞ்சய்குமார், பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தொழில்நுட்ப பிரிவு ஐ.ஜி.யாக பணிபுரிந்து வந்த செந்தாமரைக்கண்ணன், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய ஐ.ஜி.யாக பொறுப்பேற்பார். திருச்சி ஆயுதப்படை டி.ஐ.ஜி.யாக இருந்து வந்த தீபக் எம்.தாமோர், சென்னை ரெயில்வே போலீஸ் டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக பதவி வகித்து வந்த அசோக் குமார்தாஸ், சென்னை தொழில்நுட்ப பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய ஐ.ஜி.யான கல்பனா நாயக், பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக (நிதி நிறுவன வழக்குகள்) பதவியேற்பார்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.