/tamil-ie/media/media_files/uploads/2017/10/z464.jpg)
சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பிரச்சனை காரணமாக சசிகலாவின் கணவர் நடராஜன், கடந்த சில நாட்களுக்கு முன், சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினர். இதையடுத்து, மூளைச் சாவு அடைந்த ஒருவரின் உடல் உறுப்புகள் விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டு, நேற்று அந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
மூளைச்சாவு அடைந்ததாக கூறப்படும் இளைஞரின் பெயர் கார்த்திக். புதுக்கோட்டையைச் சேர்ந்தவரான கார்த்திக், கடுமையான தலைவலி மற்றும் எலும்பு முறிவுகள் காரணமாக, தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த செப்.30-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து மூத்த சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "இளைஞரின் நிலைமை கவலைக்கிடமான பின்னர், அவர் மருத்துவ விமானம் மூலம் சென்னை குளோபல் மருத்துவமனைக்கு கடந்த திங்கட்கிழமை கொண்டுவரப்பட்டார். பின் அவரை சோதனை செய்த போது, அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. அவரை குளோபல் மருத்துவமனைக்கு கொண்டு வந்ததில், எந்தவிதமான சட்டவிரோத செயல்களும் இல்லை என்பது முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது" என்றார்.
ஆனால், அரசு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மூத்த பேராசிரியர் ஒருவர் கூறுகையில், "இவ்விவகாரத்தில் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் காத்திருப்பு பட்டியலில் சட்டவிதிமுறைகள் மீறப்பட்டிருந்தால், அதுகுறித்து விசாரிக்க வேண்டும். தினக்கூலி தொழிலாளியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எப்படி மருத்துவ விமானத்திற்கு ரூ.2 லட்சம் வரை செலவு செய்திருக்க முடியும்? இவையெல்லாம், ஒரு சலுகைப் பெற்ற நோயாளிக்காக, தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் காத்திருப்பு பட்டியலில் முன்னர் உள்ளவர்களை ஏமாற்றி செய்யப்பட்டுள்ளதா?அந்த விஐபி நோயாளியின் சார்பில் தமிழகம் முழுவதும், சாத்தியமான உறுப்பு மாற்று நன்கொடையாளர்கள் எங்கு கிடைப்பார்கள் என்பதை கண்காணிக்க, ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதா?" என்றும் அந்த பேராசிரியர் கேள்வி எழுப்பியுள்ளார்.
குளோபல் மருத்துவமனையில் இருந்து, சசிகலாவிற்கு நெருக்கமானவர்கள் நேற்று(புதன்) பேசிய போது, நடராஜனுக்கு இரட்டை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஏழரை மணி நேரம் நடந்தது. வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது என்றனர்.
மருத்துவத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "தஞ்சையில் இருந்து திருச்சிக்கு கார்த்திக் சாலை மார்க்கமாக கொண்டுவரப்பட்டார். திருச்சியில் இருந்து நள்ளிரவு சென்னைக்கு மருத்துவ விமானம் மூலம் கொண்டுச் செல்லப்பட்டார். குளோபல் மருத்துவமனையைச் சேர்ந்த நரம்பியல் நிபுணர், செவ்வாய் காலை 10.30 மணிக்கு கார்த்திக் மூளைச் சாவு அடைந்துவிட்டதாக அறிவித்தார்.
நடராஜனுக்கு உறுப்புகள் வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக கூறப்படும் நிலையில், குளோபல் மருத்துவமனை சார்பில் இதனை தெளிவுப்படுத்தும் விதமாக நேற்று(புதன்) மாலை தனது அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, "கார்த்திக்கின் குடும்பத்தாரிடம் உறுப்பு மாற்று குறித்து கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. அவர்களது சம்மதத்துடன் கார்த்திக்கின் உறுப்புகள் தானம் பெறப்பட்டது. மேலும், கார்த்திக்கின் இதயம், தமிழகத்தைச் சேர்ந்த 43 வயது நபருக்கும், நுரையீரல் உ.பி.யைச் சேர்ந்த 62 வயதான நபருக்கும், லிவர் மற்றும் கிட்னி நடராஜனுக்கும் பொருத்தப்பட்டுள்ளது. மூன்று நோயாளிகளும் தற்போது காப்பாற்றப்பட்டுள்ளனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் தலைமை திட்ட மேலாளர் பிகே ஸ்ரீகுமார் இந்தியன் எக்ஸ்பிரஸ்-க்கு அளித்த பேட்டியில், "கார்த்திக்கின் விமான மருத்துவ செலவு குறித்தெல்லாம் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் ஆராய முடியாது. நாங்கள் ஒரு கட்டுப்பாட்டு அமைப்பு மட்டுமே. தொழில்நுட்ப ரீதியாக, மருத்துவமனை அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றியது. கடந்த ஏப்ரம் மாதம் முதல், நடராஜன் கல்லீரலுக்காக காத்திருந்தார். அவரது நிலைமை மேலும் மோசமடைந்ததால், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் ஆகிய இரண்டு உறுப்புகளும் மாற்றப்பட்டுள்ளது" என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.