கார்த்தி சிதம்பரம், டிசம்பர் 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை வெளிநாடு செல்வதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு, சுப்ரீம் கோர்ட் லுக்அவுட் நோட்டீஸ் வழங்கி உள்ளது. இதைத் தொடர்ந்து, தனக்கு விதிக்கப்பட்ட லுக்அவுட் நோட்டீசை திரும்ப பெறும்படியும், தான் வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும் எனவும் கார்த்தி பலமுறை விண்ணப்பித்தும், அவரின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நிராகரித்து விட்டது.
கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி அளிக்கக் கூடாது எனது சிபிஐ.,யும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில் சமீபத்தில், தனது மகளின் மேற்படிப்பு அட்மிஷனுக்காக லண்டன் செல்ல அனுமதிக்கும்படி கேட்டு கார்த்தி சிதம்பரம் மனு அளித்திருந்தார். இது தொடர்பாக கார்த்தி பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், என்னை வெளிநாடு செல்ல அனுமதித்தால், நான் அங்குள்ள எந்த வெளிநாட்டு வங்கி கணக்கையும் மூட மாட்டேன் என குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக சிபிஐ கருத்து தெரிவிக்கும்படி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், சில நிபந்தனைகளுடன் கார்த்தி வெளிநாடு செல்ல அனுமதிக்கலாம் என சிபிஐ இன்று பதிலளித்திருந்தது. சிபிஐ ஒப்புதல் அளித்ததை அடுத்து, கார்த்தி வெளிநாடு செல்ல சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது. அத்துடன், டிசம்பர் 1 ம் தேதி சென்றுவிட்டு டிசம்பர் 11 க்குள் இந்தியா திரும்பி விட வேண்டும். மீறினால் கோர்ட் உத்தரவை மீறியதற்காக நடவடிக்கை எடுக்கப்படும் என கார்த்திக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.