சட்டவிரோதமாக, புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டு தொடர்பாக, அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் சேகர் ரெட்டி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு குறித்து இரண்டு வாரத்தில் பதில் அளிக்கும்படி, அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு காண்டிராக்டர் சேகர் ரெட்டி மற்றும் அவரது உறவினர், ஆடிட்டர் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், 147 கோடி ரூபாய் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளும், சுமார் 34 கோடி ரூபாய்க்கு புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளும், 178 கிலோ தங்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதில், 34 கோடி ரூபாய் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள், பண மதிப்பிழப்பு அறிவிப்பு வெளியான 24 நாட்களில் எப்படி மாற்றப்பட்டது என்பது குறித்து சரியாக சேகர் ரெட்டி உள்ளிட்டோர் பதிலளிக்கவில்லை. இதுகுறித்து சிபிஐ போலீசார் வழக்கு பதிவு செய்து, சேகர் ரெட்டி, சீனிவாசலு ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில், மோசடியான வகையில் புதிய ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டது, ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சட்டத்துக்கு புறம்பாக வருமானம் சேர்த்தது ஆகிய குற்றச்சாட்டுகள் கீழ் இவர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
இதையடுத்து, மத்திய அமலாக்கத்துறையும், இந்த விவகாரம் தொடர்பாக, சேகர் ரெட்டி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்தது. இதில் அமலாக்க துறை சார்பில் பதிவு செய்த இந்த வழக்கை ரத்து செய்யக்கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் சேகர் ரெட்டி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி எம். எஸ். ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இதுகுறித்து இரண்டு வாரத்தில் பதில் அளிக்கும்படி, அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். இதேபோல், ஏற்கனவே, தனக்கு எதிராக சிபிஐ தொடரந்த வழக்கையும் ரத்து செய்யக் கேட்டு, சேகர் ரெட்டி மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.