/indian-express-tamil/media/media_files/2025/11/01/sengottaiyan-expelled-admk-eps-action-2025-11-01-12-50-13.jpg)
Sengottaiyan expelled from AIADMK| EPS Press meet
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.எஸ். செங்கோட்டையன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விரிவான விளக்கம் அளித்துள்ளார்.
சேலத்தில் இன்று செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறுகையில்;
”அத்திக்கடவு-அவினாசி திட்டம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க திட்டம். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்புக்கு இணங்க, நான் முதலமைச்சராக இருந்தபோது, ₹ 1,682 கோடி மாநில நிதியில் இருந்து ஒதுக்கப்பட்டு, திட்டம் 85% முடிக்கப்பட்டது.
திட்டத்தை நிறைவேற்றிக் கொடுத்ததற்காக, கட்சி சார்பின்றி விவசாயப் பெருமக்கள் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் (திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உட்பட) அவினாசியில் ஒரு பாராட்டு விழா ஏற்பாடு செய்தனர். இந்தப் பாராட்டு விழாவில் பங்கேற்கும்படி அழைத்தபோது, செங்கோட்டையன் கலந்துகொள்ளவில்லை. கோபி சட்டமன்றத் தொகுதியில் 30% ஏரிகளை நிரப்பும் திட்டம் இது என்றபோதிலும், அவர் புறக்கணித்தார்.
விழா மேடையில் ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர். படங்களும், தனது படமும் இடம்பெறவில்லை என்று ஒரு தவறான கருத்தைச் சொல்லி புறக்கணித்தார். "இது கட்சி சார்பற்ற நிகழ்ச்சி" என்று விவசாயிகளும், பிற கட்சியினரும் கோரியும், அவர் வர மறுத்தார்.
இரட்டை வேடம்: திமுக நிகழ்ச்சியில் பங்கேற்பு
அம்மா மற்றும் எம்.ஜி.ஆர். படம் இல்லை என்று அத்திக்கடவு-அவினாசி திட்ட பாராட்டு விழாவைப் புறக்கணித்த அதே செங்கோட்டையன், தனது தொகுதியில் நடந்த விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு கருணாநிதி மற்றும் ஸ்டாலின் படங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. இதுவே, அவர் திமுக-வுக்கு பிடீமாக இருப்பது நிரூபணமாகிறது. அப்போதிருந்தே அவர் திட்டத்தை வகுக்க ஆரம்பித்துவிட்டார்.
நீக்கப்பட்டவர்களுடன் தொடர்பு வைத்திருந்தது
பொதுக்குழு தீர்மானம்: ஓ. பன்னீர்செல்வம் கட்சி விரோதச் செயல்களில் ஈடுபட்டதால், அவரை அனைத்துப் பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி, அதிமுக பொதுக்குழுவில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பி.எஸ். உடன் இணைந்து செயல்படப்போவதாகச் செங்கோட்டையன் அறிவித்ததே, அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்குக் காரணம்.
53 ஆண்டுகள் கட்சியில் இருந்த அவருக்குப் பொதுக்குழுவின் முடிவுதான் இறுதியானது என்று தெரியும். தலைமை எடுத்த இந்த நடவடிக்கை, மூத்த தலைவர்களுடன் கலந்து பேசி, சட்டதிட்ட விதிகளின்படிதான் எடுக்கப்பட்டுள்ளது," என்றும் இபிஎஸ் விளக்கமளித்தார்.
10 ஆண்டுகள் வனவாசம்
முன்னாள் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் குறித்தும் இபிஎஸ் பேசினார்:
டி.டி.வி. தினகரன் 19/12/2011 அன்று அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவர். அம்மா இருந்தவரை 10 ஆண்டுகாலம் அவர் சென்னைக்கே வரவில்லை, வெளியில் தெரியாமல் இருந்தார்.
அம்மா நீக்கிய ஒருவருக்கு சசிகலா துணைப் பொதுச் செயலாளர் பதவி கொடுத்தார். கட்சி விரோதச் செயலில் ஈடுபட்டதால்தான் அம்மா நடவடிக்கை எடுத்தார். 10 ஆண்டுகாலம் வனவாசம் போனவர் எங்களைப் பற்றிப் பேசுகிறார்," என்றும் அவர் சாடினார்.
அதிமுக ஒரு இரண்டு கோடித் தொண்டர்களின் இயக்கம் என்றும், இயக்கத்தைத் துரோகம் இழைப்பவர்கள் யாராக இருந்தாலும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்றும் இபிஎஸ் அழுத்தமாகக் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us