Advertisment

செந்தில் பாலாஜி வழக்கில் காரசார வாதம்; விசாரணை ஜூன் 27ம் தேதிக்கு தள்ளிவைப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆள்கொணர்வு வழக்கு விசாரணைஜூன் 27ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

author-image
WebDesk
New Update
Senthil Balaji case

செந்தில் பாலாஜி வழக்கு

அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆள்கொணர்வு வழக்கு விசாரணையில் அமலாக்கத்துறை மற்றும் செந்தில் பாலாஜி தரப்பு இடையே காரசார வாதம் நடந்ததைத் தொடர்ந்து, விசாரணையை ஜூன் 27ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Advertisment

அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, பண மோசடியில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை ஜூன் 14-ஆம் தேதி கைது செய்த நிலையில், நெஞ்சு வலி காரணமாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆள்கொணர்வு மனுவை விசாரித்த நீதிபதிகள், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி அளித்து வழக்கு விசாரணையை ஜூன் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதித்து செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் ஜூன் 21-ம் தேதி விசாரித்தது.

அப்போது, உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்து, வழக்கை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு விசாரிப்பதாக கூறி வழக்கை ஒத்திவைத்தது.

இந்நிலையில், செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆள்கொணர்வு மனு பானு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பரத சக்ரவர்த்தி அமர்வு முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

இதனிடையே, அமலாக்கத்துறை சார்பில், செந்தில் பாலாஜி மருத்துவமனையில் உள்ள காலத்தை நீதிமன்ற காவலில் உள்ள காலமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று மனு தாக்கல் செய்தது.

மேலும், செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று அமலாக்கத்துறை தெரிவித்த நிலையில், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளை மேற்கோள்காட்டி செந்தில் பாலாஜி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான தி.மு.க எம்.பி.யும், வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோ, அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை. அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளதால் மனு விசாரணைக்கு உகந்தது. அமைச்சரின் கைது சட்டவிரோதம் இல்லை என்றால் ஆட்கொணர்வு வழக்கு தேவையில்லை ஆனால், இதில் சட்டவிரோத நடவடிக்கை உள்ளது. அமலாக்கத்துறைக்கு காவலில் எடுத்து விசாரிக்கும் அதிகாரமே இல்லை என்றும் வாதிட்டார்.

தொடர்ந்து வாதிட்ட வழகறிஞர் என்.ஆர். இளங்கோ, “அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ததற்கான காரணங்களை தெரிவித்திருக்க வேண்டும், அது அடிப்படை உரிமை. கைதுக்கான காரணத்தை தெரிவிக்காமல் யாரையும் காவலில் வைக்கக் கூடாது. அமைச்சரின் கைது குறித்த தகவலும், கைதுக்கான காரணங்களையும் தெரிவிப்பது அடிப்படை உரிமை; இதை அரசியல் சாசன பிரிவு 15 ஏ-வில் குறிப்பிடப்பட்டுள்ளது.” தனது வாதங்களை அடுக்கினார்.

அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல.. எனவே தங்கள் தரப்புதான் முதலில் வாதங்களை முன்வைக்க வேண்டும். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலத்தை நீதிமன்ற காவலாகக் கருதக் கூடாது என அமலாக்கத்துறை தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வழக்கில் நீண்ட நேரம் காரசார விவாதம் நடத்திய நிலையில், பதில் வாதத்துக்காக விசாரணையை தள்ளி வைக்க அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்ததை அடுத்து நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை ஜூன் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

V Senthil Balaji Madras High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment