அமைச்சா் செந்தில் பாலாஜியை 15 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரி அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனு மற்றும் இடைக்கால ஜாமீன் வழங்கக் கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் இன்று (ஜூன் 16) உத்தரவு பிறப்பிக்க உள்ளது.
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சா் செந்தில் பாலாஜியை 15 நாள்கள், காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று அமலாக்கத் துறையினா் சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா்.
இதேபோல், செந்தில் பாலாஜி தரப்பில் இடைக்கால ஜாமீன் வழங்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி அல்லி முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அமைச்சா் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருந்து காணொலி மூலமாக ஆஜா் படுத்தப்பட்டார்.
அப்போது அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஏ.ஆா்.எல்.சுந்தரேசன், வழக்கில் உண்மையை வெளி கொண்டுவர செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம், போக்குவரத்துக் கழக நியமனங்களுக்கு பெற்ற தொகை குறித்த முழு விவரங்களைப் பெற வேண்டி உள்ளது. அமலாக்க துறையின் விசாரணைக்கு ஒத்துழைக்காத செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த வழக்கின் புலன் விசாரணை அதிகாரியாக உள்ள அமலாக்கத் துறையின் துணை இயக்குநா் கார்த்திக் தாசரி, இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது முதல் கைது வரைக்கும் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும், கைது செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்தும் தனது வாக்குமூலத்தை அளித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என்.ஆா்.இளங்கோ, கடந்த 13 ஆம் தேதி காலை 7 மணி முதல் 14ஆம் தேதி அதிகாலை 2 மணி வரை செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தியுள்ளதால், அவரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க கூடாது என வாதிட்டார்.
இறுதியாக அமலாக்கத் துறையினா் 15 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரியது குறித்து, செந்தில் பாலாஜியின் விருப்பம் தொடா்பாக நீதிபதி அல்லி கேள்வி எழுப்பினார். அதற்கு அவா் விருப்பமில்லை என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த இரண்டு மனுக்கள் மீதும் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பிப்பதாகக் கூறி வழக்கை ஒத்திவைத்தார்.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு நேற்றிரவு மாற்றப்பட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.