தஞ்சை மாவட்டம் கதிராமங்கலம் பகுதியில் ஓஎன்ஜிசி குழாய் பதிப்பதற்கு பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்த வந்தனர். ஆனாலும், அதனைக் கண்டுகொள்ளாமல் கடந்த ஜூன் 1ந் தேதி, போலீசார் உதவியுடன் ஓஎன்ஜிசி நிறுவனம் அந்த பணிகளை மேற்கொண்டது.
இந்த நிலையில், கதிராமங்கலம்-பந்தநல்லூர் இடையே அமைக்கப்பட்டிருந்த எரிபொருள் குழாயில் கசிவு ஏற்பட்டது. இதன்காரணமாக அதிலிருந்து வெளியேறிய எரிபொருள் அப்பகுதி முழுவதும் பரவியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனால், எரிபொருள் குழாய் அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் நேற்று காலை முதல் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் வந்து பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அப்போது என்ஜிசி குழாயில் ஏற்பட்ட உடைப்பை பார்வையிடுவதர்காக போலீஸார் வந்தனர். இதனிடையே, திடீரென அங்கிருந்த போராட்டக்காரர்களுக்கும், போலீஸாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், நேற்று மாலை அங்கு வன்முறை வெடித்தது. இதனிடையே, எண்ணெய் குழாயில் ஏற்பட்ட உடைப்பில் தீ வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். கலவரத்தில் ஈடுபட்டவர்கள் நடத்திய கல்வீச்சு சம்பவத்தில் 2 போலீசார் காயம் அடைந்தனர்.
இதனால், அப்பகுதியே கலவர பூமியாக காட்சியளித்தது. வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி, போராட்டத்தில் ஈடுபட்ட ஒன்பது பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் மீது பொது சொத்துக்கு சேதம், அமைதிக்கு பங்கம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
இந்த கைது நடவடிக்கையைக் கண்டித்து, கதிராமங்கலத்தில் விவசாயிகள் இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.