நீதிமன்ற உத்தரவு வரும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கூடாது என பாஜக மூத்த தலைவரும், வழக்கறிஞருமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது தாங்கள் வைத்திருந்த நம்பிக்கையை இழந்து விட்டோம் என டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 19 பேர் ஆளுநரிடம் கடிதம் அளித்தனர். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சட்டப்பேரவையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக, திமுக தொடர்ந்த வழக்கின் மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது.
அதேசயம், ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள இபிஎஸ்-ஓபிஎஸ் அணியினர் வியூகம் வகுத்து வருகின்றனர். அந்த வகையில், முதல்வருக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் அளித்த எம்எல்ஏ-க்கள் 19 பேருக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். இதையடுத்து, ஜக்கையன் நீங்கலாக வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் அதிரடியாக நேற்று உத்தரவிட்டார். இந்த 18 தொகுதிகளும் காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையத்துக்கு தமிழக சட்டப்பேரவை செயலர் பூபதி கடிதம் அனுப்பியுள்ளார். அதேபோல், கெசட்டிலும் வெளியிடப்பட்டுள்ளது.
ஆனால் சபாநாயகரின் இந்த உத்தரவு சட்டப்படி செல்லாது என கூறப்படுகிறது. தகுதி நீக்கத்தை எதிர்த்து எம்எல்ஏ-க்கள் தொடர்ந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது. அதில், எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லாது என்ற தீர்ப்பு வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, எம்எல்ஏ-க்கள் 18 பேரின் தகுதிநீக்கம் செல்லாது என தெரிவித்துள்ளார். மேலும், நீதிமன்றத்தில் இருந்து முடிவு வரும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க கூடாது என்றும் அவர் அப்போது குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து, தனது டுவிட்டர் பக்கத்தில், தமிழகத்தில் குழப்பம் நிலவுகிறது. தமிழக அரசு, திமுக-காங்கிரஸிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. மைலாப்பூரில் உள்ள அறிவு ஜீவியும், அவரது தேர்வு செய்யப்படாத கூட்டாளியும் தங்கள் தவறுகளுக்கு பரிகாரம் செய்துகொள்வார்களா? என கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார். இங்கு மயிலாப்பூர் அறிவு ஜீவி என்பது ஆடிட்டர் குருமூர்த்தியையும், தேர்வு செய்யப்படாத கூட்டாளி என்பது மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியையும் குறிக்கும் விதமாக சுவாமி பதிவிட்டுள்ளதாக தெரிகிறது.