சபாநாயகரும், முதல்வரும் கூட்டு சேர்ந்து ஜனநாயக படுகொலை செய்துள்ளனர் என 18 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம் குறித்து கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது தாங்கள் வைத்திருந்த நம்பிக்கையை இழந்து விட்டோம் என டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 19 பேர் ஆளுநரிடம் கடிதம் அளித்தனர். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே, ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள இபிஎஸ்-ஓபிஎஸ் அணியினர் வியூகம் வகுத்து வருகின்றனர்.
அந்த வகையில், எம்எல்ஏ-க்கள் 19 பேருக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். அதேபோல், உரிமைக் குழு கூடி குட்கா விவகாரத்தில் திமுக எம்எல்ஏ-க்கள் 21 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து திமுக-வினர் நீதிமன்றம் சென்றனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், செப்டம்பர் 20-ம் தேதி வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
இதனிடையே, ஜக்கையன் நீங்கலாக வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். டிடிவி அணியில் இருந்த கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன், இபிஎஸ் அணிக்கு தாவினார். சபாநாயகர் தனபாலை சந்தித்தும் அவர் விளக்கம் கொடுத்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும், அரசியல் சட்டம் 10-வது அட்டவணைப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் தனபால் தனது செய்திக் குறிப்பில் கூறியிருக்கிறார்.
சபாநாயகரின் இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சட்டத்திற்கு புறம்பாக சபாநாயகரும், முதல்வரும் கூட்டு சேர்ந்து ஜனநாயக படுகொலை செய்துள்ளனர் 18 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம் குறித்து கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் அணி எம்எல்ஏ-க்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பிய ஸ்டாலின், நீதிமன்றம் மற்றும் மக்கள் மன்றம் மூலம் இந்த ஆட்சியை அகற்ற திமுக தொடர்ந்து போராடும் எனவும் திட்டவட்டம் தெரிவித்தார்.