டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 19 பேரை ஏன் பதவி நீக்கம் செய்யக் கூடாது என்று விளக்கம் தருமாறு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அரசு கொறடா ராஜேந்திரன் இன்று அளித்த பேட்டியில், "ஜெயலலிதா இறந்த பிறகு பிரிந்த அதிமுகவின் இரு அணிகளும் கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி இணைந்தன. தொடர்ந்து, துணை முதல்வராக பன்னீர்செல்வமும், அமைச்சராக அவரது அணியை சேர்ந்த மாஃபா பாண்டியராஜனும் பொறுப்பேற்றனர்.
இரு அணிகளும் இணைந்ததையடுத்து, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர், ஆளுநரை சந்தித்து, 'முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நாங்கள் வைத்த நம்பிக்கையை இழந்துவிட்டோம். கடந்த முறை எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் எங்களது ஆதரவுடன் தான் அவர் ஜெயித்தார். இப்போது அவரது நடவடிக்கையில் எங்களுக்கு திருப்தி இல்லை' என கடிதம் அளித்துள்ளனர்.
அவர்களின் இந்த செயல் கட்சிக்கு விரோதமானது. இத்தகைய செயல் தான் சார்ந்துள்ள கட்சி உறுப்பினர் பதவியை தானாகவே விட்டுக்கொடுக்கும் நிலைக்கு ஆளாக்கப்படுவதால், இந்திய அரசியலமைப்பு சட்டம் 10-வது அட்டவணையின் படி, அதிருப்தி எம்எல்ஏ-க்கள் தகுதியின்மைக்கு ஆளாகிறார்கள். இதனால், அந்த எம்.எல்.ஏ.க்களை தகுதியின்மையாக்க வேண்டும் என கொறடா என்ற முறையில் சபாநாயகரிடம் வைத்துள்ளேன். பரிந்துரை தொடர்பான முடிவை சபாநாயகர் எடுப்பார்" என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், கொறடா பரிந்துரை குறித்து ஒருவாரத்திற்குள் 19 எம்.எல்.ஏ.க்களும் பதிலளிக்க வேண்டும் என சபாநாயகர் தனபால் எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். உங்களை ஏன் பதவி நீக்கம் செய்யக் கூடாது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து புதுச்சேரி ரிசார்ட்டில் உள்ள தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வன் அளித்த பேட்டியில், "சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸ் எங்களுக்கு வரவில்லை. இந்த மிரட்டலுக்கு எல்லாம் நாங்கள் பயப்படமாட்டோம். 19 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கொறடா பரிந்துரைத்தது சட்டப்படி செல்லாது" என்று தெரிவித்துள்ளார்.
டிடிவி.தினகரன் அணி 19 எம்.எல்.ஏ.க்கள் நீக்கமா? அரசு கொறடா கடிதம் என்ன சொல்கிறது?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.